Published : 27 Nov 2020 12:05 PM
Last Updated : 27 Nov 2020 12:05 PM
ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 22,806 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜெர்மனி சுகாதாரத் துறை தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 22,806 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,06,394 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று மட்டும் 426 பேர் கரோனாவுக்குப் பலியாகினர். இதனால் கரோனா பலி எண்ணிக்கை 15,586 ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் கடந்த 3ஆம் தேதி முதல் பகுதி நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. வரும் வாரங்களில் கரோனா பரவல் அதிகமாக இருக்கும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இருக்க வேண்டும் என்றும், ஜெர்மனி மருத்துவ நிபுணர்கள் முன்னரே எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் கரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் அழைப்பு விடுத்துள்ளார்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT