Published : 26 Nov 2020 02:45 PM
Last Updated : 26 Nov 2020 02:45 PM
பாகிஸ்தானின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரான பிலாவல் பூட்டோவுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், “எனக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். எனக்கு லேசனா அறிகுறிகள் உள்ளன. நான் தொடர்ந்து இணையம் வழியாக எனது அரசியல் பணிகளைத் தொடருவேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பிலாவலின் அரசியல் செயலாளர் ஜமிலுக்கு சில நாட்களுக்கு முன்னர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பல நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. மேலும், பொதுமக்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் கரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்க உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், பாகிஸ்தானில் இரண்டாவது ஊரடங்கை அமல்படுத்த முடியாது. எனினும் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT