Published : 24 Oct 2015 10:01 AM
Last Updated : 24 Oct 2015 10:01 AM
பொலிவியாவில் உள்ள மரங் களுக்கு பிறநாடுகளில் கிராக்கி இருக்கிறது. விவசாய நிலப்பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணமும் அரசுக்கு இருக்கிறது. இவற்றின் காரணமாக காடுகள் அழிக்கப்படு கின்றன.
பொலிவியா ஒரு தைரியமான நாடு. மொரேல்ஸ் ஒரு துணிவுமிக்க அதிபர் எனலாம். மெக்ஸிகோவில் உள்ள சுற்றுச் சூழல் குறித்து சென்ற ஆண்டு ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் பல விஞ்ஞானிகளும்கூட கலந்து கொண்டனர். உலகம் வெப்பமயம் ஆவதைத் தடுத்து நிறுத்த சில நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. பின்னர் இவை குறித்து அந்தக் கூட்டத்தில் முடிவு எடுத்தபோது அதில் ஐ.நா.வின் உறுப்பினர்களாக இருக்கும் 192 நாடுகள் இந்த முடிவுக்கு ஒத்துக் கொண்டன. பொலிவியா மட்டுமே இதை ஏற்றுக் கொள்ளவில்லை.
பொலிவியா மட்டும் இதில் ஏன் மாறுபட வேண்டும்? காரணம் உண்டு. உலக வெப்பமய மாதல் என்பது நாடு கடந்த பிரச்னைதான். ஆனால் பொலிவியாவில் இதன் தீவிரம் குறிப்பிடத்தக்கது. அங்குள்ள பனி மலைகள் (Andean Glaciers) மூன்றில் ஒரு பங்கு உருகிவிட்டன. அடுத்த 10 வருடங்களில் இப்போது இருப்பதில் பாதி
பனிக்கட்டிகள் உருகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பொலிவியா அதிகமாகக் கவலைப்படுகிறது.
தங்களது அரசியல் அமைப்பு சட்டத் திலேயே சுற்றுச் சூழல் தொடர்பான பல சட்டங்களை அறிமுகப்படுத்தலாம் என்று பொலிவியா திட்டமிடுகிறது. ‘‘மரங்களையும் விவசாயத்தையும் பாதுகாப்பது என்ற பெயரில் முன்னேற்றத் தைத் தடுத்து நிறுத்தி விட முடியுமா? ‘ஆசிரம வாழ்க்கையா வாழப் போகி றார்கள் பொலிவியர்கள்?’ என்று சில மேலை நாட்டு ஊடகங்கள் இதைக் கிண்டல் செய்கின்றன.
மொரேல்ஸ் இதுகுறித்துக் கவலைப்பட வில்லை. ‘‘பொலிவியாவின் முதல் நிஜமான உள்ளூத் தலைவர் நான்தான். இந்த தேசத் தில் உள்ளூர்வாசிகளைவிட வெள்ளையர் களிடம்தான் எக்கச்சக்கமாக பணம் குவிந்திருக்கிறது. கொஞ்சம் சரிசெய்வதில் தப்பில்லை’’ என்கிறார். (மொரேல்ஸின் ஆட்சியில் 36 உள்ளூர்மொழிகள் அதிகார பூர்வ மொழிகளாக சட்ட அங்கீகாரம் பெற்றுள் ளன).
பணக்காரர்களிடமிருந்து நிலத்தை அரசு ஏற்றுக் கொள்ளும். நிலச் சீர்திருத்தச் சட்டம் அறிமுகமாகிவிட்டது. அதிக வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரி வசூலிக்கப்படுகிறது.
பொதுவான சுற்றுச் சூழல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட பொலிவியா மறுத்தவுடன் அமெரிக்கா தான் அந்த நாட்டுக்கு செய்து வந்த நிதி உதவியைக் குறைத்துக் கொண்டது. ஆனால் இந்த மிரட்டல் போதிய பலன் அளிக்கவில்லை. காரணம் பிரேசில், வெனிசுவேலா போன்ற நாடுகள் பொலிவியாவுக்கு நிதி நெருக்கடியின் போது கைகொடுக்கத் தொடங்கின. தவிர உலக நிதியமும், உலக வங்கியும் பொலி வியாவுக்கு அளித்த கடனில் ஒரு பகுதியைத் தள்ளுபடி செய்தன. இதன் காரணமாக பொலிவியாவின் சிக்கல் குறைந்தது.
பொலிவியாவின் வடமேற்குப் பகுதியில் இருக்கிறது மடிடி தேசியப் பூங்கா. உலக சுற்றுச் சுழல் ஆர்வலர்களின் தனி கவனத்தைப் பெற்றது இந்தப் பூங்கா. ஏன் பெறாது? உலகில் உள்ள பறவை இனங்களில் 11 சதவீதம் இந்தப் பூங்காவில் பறந்து திரிகின்றன.
அப்படியானால் ஓர் ஆகச் சிறந்த வனவிலங்கு பாதுகாப்புப் பகுதி இது எனலாமா? அங்கேதான் சந்தேக மேகங்கள் படிகின்றன.
மடிடியை ஒரு ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என்றுதான் பொலிவிய அரசு குறிப்பிடுகிறது. ஆனால் உண்மையில் அப்படியா?
18 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது இந்தப் பூங்கா. ஆனால் இதில் முக்கால்வாசி பகுதி பெட்ரோலிய வளமும் உள்ள பகுதி. ஏற்கெனவே பல நாடுகளும், நிறுவனங்களும் இந்தப் பகுதியின் மீது கண் பதித்திருக்கின்றன. தவிர அங்கு தங்கம் கிடைக்கிறது என்ற செய்தியும் வந்திருக்கிறது. கோகோ பயிர் விளைய அற்புதமான மண் வளம் கொண்ட பகுதி இது என்ற கருத்தும் நிலவுகிறது. தவிர இந்தப் பகுதியில் ஒரு பிரம்மாண்டமான நீர் மின் நிலையம் கட்டலாம். இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தத் தொடங்கியிருக்கிறார் மொரேல்ஸ். சத்தமில்லாமல் சிலவகை ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிவிட்டன என்கிறார்கள்.
பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலுள்ள பெட்ரோலிய வளங்கள் தோண்டி எடுக்கப் பட்டால், பொலிவியாவின் முன்னேற்றம் சிக்கலின்றி இருக்குமே. தவிர மிக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு இல்லாமல்கூட இதைச் செய்ய முடியுமே. இதுபோன்ற கருத்துகள் பொலிவியாவில் வலம்வரத் தொடங்கிவிட்டன.
ஆனால் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கொதிக்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட பகுதி என்றால் நூறு சதவீதம் பாதுகாக்கப்பட வேண்டும். ‘பொறுப்புடன் பூமியைத் தோண்டுவது’ என்பதையெல்லாம் ஏற்க முடியாது. அரசே இதுபோன்ற செயல் களை ஆதரிப்பது மிகவும் அபாயகர மானது என்கிறார்கள் இவர்கள்.
பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரான தெரஸா ஃப்லோர்ஸ் என்பவர் ‘‘இந்த அரசு, அன்னை பூமியை காப்பதாக அடிக்கடி கூறுகிறது. ஆனால் இதன் செயல்பாடுகள் அதற்கு நேரெதிராக உள்ளன. மற்ற பல அரசுகளைவிட இந்த அரசு சுற்றுச் சூழலை மிகவும் அழித்துக் கொண்டிருக்கிறது. முடிந்த வரை இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த அரசின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. அதற்காக சுற்றுச்சூழல் எவ்வளவு பாதிக்கப் பட்டாலும் பரவாயில்லை என்றுதான் நடந்து கொள்கிறது. ‘பாதுகாக்கப் பட்ட பகுதிகள்’ என்றெல்லாம் அரசு வரையறுத்திருப்பது சும்மா பேச்சுக் காகத்தான். நடுநிலைமையான சுற்றுப்புறச் சூழல் அமைப்பின் மூலம் பொலிவி யாவில் விவரத்தை அறியச் சொன்னால் உண்மைகள் வெளிவந்துவிடும். பாதுகாக் கப்பட்ட பகுதிகளுக்கு இந்த அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கு வதில்லை. இந்தப் பகுதிகளில் கோகோ விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்யும்போது அதை அரசு தடுப்பதில்லை’’ என்கிறார்.
(உலகம் உருளும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT