

ஐஸ் பக்கெட் சவாலைத் தொடங்கியவர்களில் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த பேட்ரிக் குவின் உடல்நலக் குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 37.
இதுகுறித்து பேட்ரிக் குவின் குழு சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், “இன்று காலை பேட்ரிக் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். ஏ.எல்.எஸ் (Amyotrophic lateral sclerosis) எனப்படும் நரம்பியல் பாதிப்பு நோய்க்கு எதிராகப் போராடியதற்காக எப்போதும் அவரை நினைவில் கொள்வோம்” என்றார்.
ஏ.எல்.எஸ் (Amyotrophic lateral sclerosis) எனப்படும் நரம்பியல் பாதிப்பு நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேர்க்கவும் இந்த ஐஸ் பக்கெட் சவால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நோயால் நரம்பு மண்டலம் பாதிப்படைவதால், நோயாளிகளுக்கு நடப்பது, பேசுவது போன்ற செயல்கள் மிகக் கடினம். ஒரு கட்டத்தில் அவை சுத்தமாக நின்றும் போகும். இது மரணத்தில் முடியும் அபாயமும் உள்ளது.
ஐஸ் பக்கெட் சவாலின் முதல் விதி, இந்தச் சவாலை ஏற்றுக்கொண்ட 24 மணி நேரத்தில் இதைச் செய்து முடித்து 10 டாலரை மட்டும் ஏ.எல்.எஸ் அமைப்புக்கு நன்கொடையாகத் தர வேண்டும். சவாலைச் செய்ய முடியவில்லை என்றால் 100 டாலர்களை நன்கொடையாகத் தர வேண்டும்.