Published : 19 Nov 2020 09:30 PM
Last Updated : 19 Nov 2020 09:30 PM
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐரோப்பாவில் ஒவ்வொரு 17 நொடிகளுக்கு ஒருவர் கரோனா வைரஸால் பலியானதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் இரண்டாம் கட்ட நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக ஜெர்மனி, ஸ்வீடன், பிரிட்டன் ஆகிய நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐரோப்பாவில் ஒவ்வொரு 17 நொடிகளுக்கு ஒருவர் கரோனா வைரஸால் பலியாகினர்” என்று தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.
பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா பரவல் தொடங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT