Published : 19 Nov 2020 12:02 PM
Last Updated : 19 Nov 2020 12:02 PM

அமெரிக்காவில் கரோனா பலி 2,50,000-ஐக் கடந்தது

அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 2,50,000-ஐக் கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் கூறும்போது, “அமெரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்த நிலையில் அங்கு கரோனாவினால் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேத்தில் 1,707 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா வைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை 2,56, 254 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்துக்குப் பிறகு அமெரிக்காவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை பரவியது போன்று, தற்போது நாள்தோறும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதல் பணியாக புதிய மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x