Published : 17 Nov 2020 09:16 PM
Last Updated : 17 Nov 2020 09:16 PM

கரோனாவைத் தடுக்க தீவிர நடவடிக்கையில் இறங்குங்கள்: அதிகாரிகளுக்கு கிம் உத்தரவு

உலக நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வைரஸைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்குமாறு வடகொரிய அதிபர் கிம் அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வடகொரிய அரசு ஊடகம் தரப்பில், “உலகம் முழுவதும் கரோனா தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் கரோனா வைரஸைத் தடுக்கும் பணிகளில் தீவிரமாக இறங்க வேண்டும் என்று கிம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உலகம் முழுவதும் கரோனாவில் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும்போது வடகொரியாவில் மட்டும் கரோனா தொற்று குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அதிபர் கிம், தங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இல்லை என்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா பரவல் தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x