Published : 17 Nov 2020 07:26 PM
Last Updated : 17 Nov 2020 07:26 PM

ஈரானின் அணு உலை தளத்தைத் தாக்கத் திட்டமிட்ட ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற நிலையில், கடந்த வாரம் ஈரானின் அணு உலை தளத்தைத் தாக்கத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், “அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானின் அணு உலை தளத்தைக் கடந்த வாரம் தாக்கத் திட்டமிட்டிருந்தார். தனது விருப்பத்தை அதிகாரிகளிடம் கூறியபோது அதிகாரிகள் அதற்கான சாதக, பாதகங்களை ட்ரம்ப்பிடம் எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்த முடிவிலிருந்து பின் வாங்கியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.

ட்ரம்ப் தனது நான்கு வருட ஆட்சிக் காலத்தில் ஈரானுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்துள்ளார். ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிய பின்பு, அந்நாட்டின் மீது தொடர்ச்சியாக பொருளாதாரத் தடைகளை ட்ரம்ப் விதித்து வந்தார்.

மேலும், ஈரானின் முக்கிய ராணுவத் தளபதியான காசிம் சுலைமானை அமெரிக்கப் படைகளை வைத்து ட்ரம்ப் கொன்றார். இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்துள்ளது.

முன்னதாக, சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றார். 2021-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் எந்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் தங்கள் நிலைப்பாடு ஒரே மாதிரியாக இருக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x