Last Updated : 17 Nov, 2020 01:21 PM

 

Published : 17 Nov 2020 01:21 PM
Last Updated : 17 Nov 2020 01:21 PM

ட்ரம்ப்பும் நானும் ஒத்துழைத்துச் செயல்படாவிட்டால் அமெரிக்காவில் அதிகமான மக்கள் கரோனாவால் உயிரிழக்க நேரிடும்: ஜோ பைடன் எச்சரிக்கை

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப்பும் நானும் ஒத்துழைத்துச் செயல்படாவிட்டால், அமெரிக்காவில் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், குடியரசுக் கட்சியோ தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அதிபர் ட்ரம்ப்பும் தேர்தல் வெற்றியை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறார்.

இதற்கிடையே அமெரிக்காவில் கரோனா வைரஸ் 2-வது அலை தாக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை அமெரிக்காவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கரோனா தடுப்புப் பணிகளை அமெரிக்காவில் செய்வதில் அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

டெலாவேரில் உள்ள வில்மிங்டன் நகரில் ஜோ பைடன் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அதிபர் ட்ரம்ப் எங்களுடன் ஒத்துழைத்துச் செயல்படாவிட்டால், இன்னும் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிடும். கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் நானும், அதிபர் ட்ரம்ப்பும் ஒத்துழைத்துச் செயல்படாவிட்டால், அதிகமான அமெரிக்கர்கள் உயிரிழக்க நேரிடும்.

தடுப்பு மருந்து மிகவும் முக்கியமானது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவரை கரோனாவில் தப்பிக்க வாய்ப்பு குறைவுதான். ஆனால், தடுப்பூசி கண்டுபிடித்து நடைமுறைக்கு வந்துவிட்டால், மக்கள் எவ்வாறு தடுப்பூசியைப் பெறுவார்கள், 30 கோடி அமெரிக்க மக்களுக்கும் எவ்வாறு வழங்கப் போகிறீர்கள் எனும் திட்டம் ஏதும் இருக்கிறதா? அதற்காக அரசு என்ன திட்டத்தை வைத்துள்ளது?

மக்களுக்குத் தடுப்பூசி போடுதல் என்பது மிகப்பெரிய பெரிய பணி. முன்னுரிமை அடிப்படையில்தான் மக்களுக்குக் கரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும். உலக சுகாதார அமைப்புடன் ஒத்துழைத்துதான் இந்தப் பணியை நம்மால் செய்ய முடியும்.

கரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரமான வேகத்தில் செல்கிறது என்று ட்ரம்ப் நிர்வாகம் தெரிவிக்கிறது. தடுப்பு மருந்து நமது கைக்குக் கிடைத்தால் மட்டும் போதாது. அதை எப்படி மக்களுக்கு வழங்கப்போகிறோம். 2021-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதிவரை காத்திருந்தால், எங்களின் திட்டம் தொடங்கிவிடும். இன்னும் ஒன்றரை மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

இப்போதுள்ள சூழலில் மிகவும் முக்கியமானது, அதிபர் ட்ரம்ப் எங்களுடன் ஒத்துழைத்துச் செயல்பட்டு, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களிடம் கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு எவ்வாறு வழங்குவது, ஒவ்வொருவருக்கும் எப்படி வழங்குவது, தொழிலாளர்கள், குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியனர் அனைவருக்கும் எவ்வாறு வழங்குவது எனச் செயல்திட்டம் இருக்கிறது.

நான் உங்களிடம் கூறுவது என்னவென்றால், நான் உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். நீங்கள் ஒத்துழைத்துச் செயல்பட வேண்டும்''.

இவ்வாறு ஜோ பைடன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x