Published : 16 Nov 2020 08:44 PM
Last Updated : 16 Nov 2020 08:44 PM

கரோனா தடுப்பு மருந்து 95% பயனுள்ளதாக உள்ளது: அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு

தாங்கள் கண்டறிந்துள்ள கரோனா தடுப்பு மருந்து 95% பயனுள்ளதாக உள்ளது என்று அமெரிக்காவின் பயோடெக் நிறுவனமான மாடர்னா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் பயோடெக் நிறுவனமான மாடர்னா இன்று (திங்கட்கிழமை) தனது மருத்துவப் பரிசோதனையின் முடிவை வெளியிட்டுள்ளது. இந்தப் பரிசோதனையில் 30,000க்கும் அதிகமானவர்கள் பங்கெடுத்துள்ளனர் என்றும், இவர்களுக்கு நான்கு வார இடைவெளியில் இரண்டு முறை கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டது என்றும் மாடர்னா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாடர்னா நிறுவனத்தின் தலைவர் ஸ்டீபன் பன்சல் கூறும்போது, “எங்களது கரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனை முடிவு 95% பயனுள்ளதாக வந்துள்ளது. இது சிறந்த நாள்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உருவாக்கப்படும் மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்தன.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 90 சதவீதம் பலன் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனாவுக்கான தடுப்பு மருந்து 50 சதவீதம் பலன் அளித்தாலே சாதகமான விஷயம் என்று கூறப்பட்டுவந்த நிலையில், பைசர் உருவாக்கிய தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் அளித்திருப்பது உலகளாவிய மருந்துவக் குழுவினர்களுக்கு நம்பிக்கை வழங்கி இருக்கிறது.

அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யாவும், தான் தயாரித்த ஸ்புட்னிக்-5 என்ற கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பலன் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல் சீனா உருவாக்கியுள்ள தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளன.

லண்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தலைமையில் கண்டுபிடிக்கப்படும் கரோனா தடுப்பு மருந்து இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x