Published : 16 Nov 2020 08:17 PM
Last Updated : 16 Nov 2020 08:17 PM

ஈரானில் கரோனா பலி இரண்டாவது நாளாக அதிகரிப்பு

ஈரானில் இரண்டாவது நாளாக கரோனாவினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில், “ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 13,053 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,75,121 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 486 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். கரோனா வைரஸால் ஏற்படும் பலி எண்ணிக்கை இரண்டாவது நாளாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் 27 மாகாணங்களில் கரோனா தொற்று தீவிரமாக இருப்பதாகச் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரானில் சமீப நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிகையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வடபகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x