தடுப்பு மருந்து மட்டுமே கரோனா தொற்றை முடிவுக்குக் கொண்டுவராது: உலக சுகாதார அமைப்பு

தடுப்பு மருந்து மட்டுமே கரோனா தொற்றை முடிவுக்குக் கொண்டுவராது: உலக சுகாதார அமைப்பு
Updated on
1 min read

தடுப்பு மருந்து மட்டுமே கரோனா தொற்றுப் பரவலை முடிவுக்குக் கொண்டு வராது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் கூறும்போது, “கரோனா தடுப்பு மருந்து நமது தேவைகளைப் பூர்த்தி செய்யும். ஆனால், கண்டுபிடிக்கப்படும் கரோனா தடுப்பு மருந்து மட்டுமே தொற்றுப் பரவலை முடிவுக்குக் கொண்டு வராது” என்று தெரிவித்தார்.

கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உருவாக்கப்படும் மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்தன.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து மூன்றாம்கட்டப் பரிசோதனையில் 90 சதவீதம் பலன் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனாவுக்கான தடுப்பு மருந்து 50 சதவீதம் பலன் அளித்தாலே சாதகமான விஷயம் என்று கூறப்பட்டுவந்த நிலையில், பைசர் உருவாக்கிய தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் அளித்திருப்பது உலகளாவிய மருந்துவக் குழுவினர்களுக்கு நம்பிக்கை வழங்கி இருக்கிறது.

அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யாவும், தான் தயாரித்த ஸ்புட்னிக்-5 என்ற கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பலன் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல் சீனா உருவாக்கியுள்ள தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளன.

லண்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தலைமையில் கண்டுபிடிக்கப்படும் கரோனா தடுப்பு மருந்து இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய கரோனா வைரஸுக்கு இன்று உலகம் முழுவதும் சுமார் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in