Published : 16 Nov 2020 07:58 AM
Last Updated : 16 Nov 2020 07:58 AM
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னை சந்தித்த எம்.பி.க்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து மீண்டும் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
பிரிட்டனில் கடந்த சில வாரங்களாக கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வந்தது, உயிரிழப்பும் நூற்றுக்கணக்கில் உயர்ந்தது. இதையடுத்து, பிரிட்டனில் மீண்டும் கரோனா வைரஸ் 2-வது அலை உருவாகும் சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அங்கு மீண்டும் லாக்டவுனை அறிவித்தார். இதன்படி கடந்த 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள லாக்டவுன் டிசம்பர் 2-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைமுறையில் இருக்கும்.
மக்கள் வீட்டை விட்டு அத்தியாவசிய தேவைக்களுக்கு மட்டுமே வெளிேய செல்லலாம். குறிப்பாக பள்ளி, கல்லூரிகள், பணி, உடற்பயிற்சி, மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே செல்லலாம். ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை, பார்சல் வாங்க மட்டுமே அனுமதி உண்டு.
பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வழக்கம் போல் திறந்திருக்கும். பப், ரெஸ்டாரன்ட்கள் மூடப்படும். அத்தியாவசியமற்ற அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளது.
இந்த புதிய ஊரடங்கு உத்தரவால் வேலையிழப்பால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஊதியத்தில் 80 சதவீதம் மானியமாக வழங்கப்படும் என பிரிட்டன் அரசுஅறிவித்துள்ளது.
இந்தநிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கரோனா அச்சம் காரணமாக தன்னை மீ்ண்டும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
போரிஸ் ஜான்சனுக்கு கரோனா வைரஸ் தொற்று கடந்த ஏப்ரலில் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர் சிகிச்சை எடுத்து வந்தார். பின்னர் லண்டனில் உள்ள புகழ்பெற்ற புனித தாமஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.
கடந்த வாரம் எம்.பி.க்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அவருடன் தொடர்பில் இருந்த எம்.பி. லீ ஆண்டர்சன் என்பவருக்கு பரிசோதனை முடிவில் கரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போரிஸ் ஜான்சன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT