Published : 15 Nov 2020 04:53 PM
Last Updated : 15 Nov 2020 04:53 PM
அடுத்த வாரம் சனிக்கிழமை முதல் கரோனா பரவலை தடுப்பதற்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, “மத்திய கிழக்கு நாடுகள் கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஈரானில் கரோனா பரவல் மூன்றாம் கட்டத்தை அடைந்துள்ளது. அதன் தீவிரம் அதிகமாக இருக்கும். இதனால் அடுத்த சனிக்கிழமை முதல் கரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக இருக்கும். இதற்காக திட்டமிடல் தொடங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் 27 மாகாணங்களில் கரோனா தொற்று தீவிரமாக இருப்பதாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானில் சமீப நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிகையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.
ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT