மக்களின் விருப்பத்தை முறியடிக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி ஈடுபட்டுள்ளது: கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு

மக்களின் விருப்பத்தை முறியடிக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி ஈடுபட்டுள்ளது: கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தீர்க்கமாக வெற்றி பெற்றுள்ளார் என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ''அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அதிக வாக்குகள் பெற்று ஜோ பைடன் தீர்க்கமாக வெற்றி பெற்றுள்ளார். மக்களின் விருப்பத்தை முறியடிக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி ஈடுபட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றிக்குத் தேவைப்படும் 270 பிரதிநிதி வாக்குகளில் 290 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ட்ரம்ப் 214 பிரதிநிதிகள் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும், இதனைச் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

ஜனவரி 20ஆம் தேதி வரை ட்ரம்ப் அதிபர் பதவியில் இருப்பார். அதன் பிறகு ஜனநாயகக் கட்சியின் சார்பில் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் பதவியேற்பார்.

இந்த அதிகார மாற்றத்தை எந்தவித இடையூறுமில்லாமல் நடத்திக் கொடுக்கவும், ஜோ பைடனுக்கு ஒத்துழைக்குமாறும் ட்ரம்ப்புக்கு அமெரிக்காவில் நெருக்கடி அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in