Published : 03 Oct 2015 08:46 AM
Last Updated : 03 Oct 2015 08:46 AM

உலக மசாலா: மின்மினி பூங்கா!

ஒரு மின்மினி பூங்கா அமைக்க வேண்டும் என்ற சீனாவின் கனவு நிறைவேறிவிட்டது. மத்திய சீனாவின் வுஹான் நகரில் அமைந்திருக்கிறது இந்த மின்மினிப் பூங்கா. இரவு நேரங்களில் பல்லாயிரக்கணக்கான மின்மினிகளின் ஒளியைக் கண்டு ரசிக்கலாம். இந்தப் பூங்கா 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பறக்கும் பகுதி, கவனிக்கும் பகுதி, தொலைவில் இருந்து பார்க்கும் பகுதி, இனப்பெருக்கப் பகுதி, அறிவியல் விளக்கப் பகுதி என்று பிரிக்கப்பட்டு, பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கிறது. இங்கே பார்வையாளர்கள் தவிர, ஆராய்ச்சியாளர்களும் பெருமளவில் வருகிறார்கள். இங்கிருந்து மின்மினிகளை விலைக்கு வாங்கிக்கொண்டும் செல்ல முடியும்.

மே மாதம் திறக்கப்பட்ட இந்த மின்மினிப் பூங்காவில் இன்று வரை கூட்டத்துக்குக் குறைவில்லை. பூச்சிகள் வாழக்கூடிய இயற்கை வளங்கள் குறையும் நேரத்தில் இப்படிப்பட்ட பூங்காக்கள் பூச்சிகளுக்கு நன்மை அளிக்கின்றன. இங்கிருந்து உற்பத்தியாகும் மின்மினிப்பூச்சிகளை ஒரு ஜாடியில் அடைத்து, பல்வேறு இடங்களுக்கும் இணையம் மூலம் விற்பனை செய்து வருகிறார்கள். அக்டோபர் வரை இந்தப் பூங்கா திறந்திருக்கும். மீண்டும் அடுத்த ஆண்டு மே மாதம் திறக்கப்படும். டைனோசர் கண்காட்சி, குழந்தைகள் விளையாட்டுகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகளும் மின்மினிப் பூங்காவில் நடைபெற்று வருகின்றன.

அடடா! நினைக்கும்போதே சுவாரசியமா இருக்கு!

நோரா கென்னடியும் மார்டின் ஜாக்ஸும் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்கள். பழங்கால பழக்கவழக்கங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். வில்லோ மரங்களின் பிரம்புகளில் இருந்து அவரவருக்குத் தேவையான சவப்பெட்டி செய்யும் கலையைக் கற்றுத் தருகிறார்கள். “நமக்கு நாமே சவப்பெட்டி என்பது கொஞ்சம் சங்கடமாக இருக்கலாம். ஆனால் என்றாவது ஒருநாள் அது நமக்குத் தேவைப்படத்தானே போகிறது?

இறந்த பிறகாவது ஏழை, பணக்காரன் அடையாளம் இன்றி, சுற்றுச்சூழலைக் கெடுக்காமல் உடல் மட்கிப் போகவேண்டும். அதற்காக நமக்கு நாமே சவப்பெட்டி செய்துகொள்ளும் பயிற்சியை அளித்து வருகிறோம். நாம் இறக்கும் வரை இந்தச் சவப்பெட்டியை புத்தக அலமாரியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என்கிறார் மார்டின் ஜாக்ஸ். பயிற்சியில் சேருவதற்கு 30 ஆயிரம் ரூபாய் கட்டணம்.

டூ இன் ஒன் பெட்டி!

அமெரிக்காவில் வசிக்கும் அபிகைல் கிங்ஸ்டனுக்குத் திருமணம் நிச்சயமானது. உடனே 120 ஆண்டுகளுக்கு முன் தன் பாட்டிக்கும் பாட்டிக்கும் பாட்டி அணிந்திருந்த திருமண ஆடையை அணிந்துகொள்ள முடிவு செய்தார். 1895ம் ஆண்டு மேரி லோரி வாரென் இந்தத் திருமண ஆடையை அணிந்திருந்தார். அதற்குப் பிறகு 10 பெண்கள் இந்த ஆடையை அணிந்து திருமணம் செய்துகொண்டார்கள். மேரி லோரியின் மகள்கள் யாரும் இந்த ஆடையை அணிய விரும்பவில்லை. ஆனால் மேரியின் பேத்திகளில் இருந்து அணியும் வழக்கம் உருவானது. “நான் சிறுமியாக இருந்தபோது இந்த ஆடையை அணிந்த முதல் 6 மணப்பெண்களின் புகைப்படங்களைப் பார்த்தேன். நானும் இதை அணிந்துதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்தேன்.

என் அம்மாவுக்கும் பாட்டியின் ஆடை மிகவும் பிடித்திருந்தது. அதனால் என் விருப்பத்தை ஏற்றுக்கொண்டார். உடனே கடைசியாக இந்த ஆடையை அணிந்த மணப்பெண்ணைத் தொடர்புகொண்டோம். அவரும் மகிழ்ச்சியாக அனுப்பி வைத்தார். ஆர்வத்துடன் பெட்டியைத் திறந்த நான் அதிர்ந்து போனேன். துணி வண்ணம் மாறியிருந்தது. என் உயரத்துக்குக் குட்டையாகவும் இருந்தது. இதை அணிய முடியாது என்றார்கள். நான் அணிந்தால் இந்த ஆடைதான் என்பதில் உறுதியாக நின்றேன். பலமுறை ஆடையில் திருத்தங்களை மேற்கொண்டோம். துளைகள் விழுந்திருந்த கைகளுக்கான பகுதிகளை மாற்றினோம். சுத்தம் செய்தோம். 200 மணி நேரங்களைச் செலவிட்டு, ஆடையின் அழகை மீட்டு எடுத்தோம்.

நான் அந்த பழம் பெருமை வாய்ந்த ஆடையை அணிந்தபோது ஒரு சிண்ட்ரெல்லாவாக உணர்ந்தேன்’’ என்கிறார் அபிகைல். திருமணம் முடிந்து சிறிது நேரம் வரை இந்த ஆடையில் இருந்தவர், பிறகு புது ஆடையை அணிந்துகொண்டார். மேரியின் 50வது திருமணநாளுக்கு அவரது கணவர் அளித்த லாகெட், மோதிரம் போன்றவற்றுடன் ஒரே ஆடையை அணிந்த 10 மணப்பெண்களின் புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 12வது மணமகள் அணிவதற்காக அந்தச் சிறப்பு மிக்க ஆடை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.

பழைய பொருட்களை மதிப்பதில் அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் நிகர் யாரும் இல்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x