Published : 09 Nov 2020 02:20 PM
Last Updated : 09 Nov 2020 02:20 PM

பாலஸ்தீனம் - இஸ்ரேல் விவகாரத்தில் ஜோ பைடன் நிலைப்பாடு என்ன?

நீண்ட நாட்களாகத் தொடரும் இஸ்ரேல் - பாலஸ்தீன நாடுகளுக்கு இடையேயான மோதலில் அமெரிக்கா எப்போதும் இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேலுக்கும் அதன் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுக்கும் ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளார்.

கடந்த 1967-ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்தது. இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனும் இஸ்ரேலுக்கு ஆதரவாகத்தான் செயல்படுவார் என்று பாலஸ்தீன அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாலஸ்தீன ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “ஜோ பைடன் தனது அரசியல் பயணத்தில் பெரும்பாலான தருணங்களில் இஸ்ரேலின் பக்கம் நின்றிருக்கிறார். இஸ்ரேல் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளார்.

பைடனின் சமீபத்திய பேச்சுகளும் அவர் இஸ்ரேலுடன் நட்பாக இருக்க விரும்புகிறார் என்பதையே காட்டுகிறது. மேலும், பெரும்பாலான பாலஸ்தீனத் தலைவர்களும் பாலஸ்தீனம் -இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x