Published : 09 Nov 2020 01:32 PM
Last Updated : 09 Nov 2020 01:32 PM

பிடிவாதம் வேண்டாம் ட்ரம்ப்... முடிந்து விட்டது...ஜோ பைடன் அதிபராக ஒத்துழையுங்கள்:  ட்ரம்புக்கு அதிகரிக்கும் நெருக்கடி

ஜனவரி 20ம் தேதி வரை, அமெரிக்க தேர்தலில் தோற்ற, அதிபர் ட்ரம்ப் பதவி நீடிக்கிறது, அதன் பிறகு ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்ஆளர் ஜோ பைடன் அதிபராக வேண்டும், இந்த அதிகார மாற்றத்தை எந்த வித இடையூறுமில்லாமல் நடத்திக் கொடுக்க ஜோ பைடனுக்கு ஒத்துழைக்குமாறு ட்ரம்புக்கு அமெரிக்காவில் நெருக்கடி அதிகமாகி வருகிறது.

பொதுச்சேவைகள் நிர்வாகம் பைடனை அதிபராக அங்கீகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதுதான் அதிகார மாற்றத்தை, புதிய அதிபர் பொறுப்பேற்பை நடத்திக் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த முகமையின் ட்ரம்ப் நியமித்த நிர்வாகியான எமிலி மர்ஃபி இன்னும் ஜோ பைடன் அதிபராகும் செயல்முறையை எதையும் தொடங்கவில்லை, எப்போது தொடங்குவார் என்பதற்கான வழிகாட்டுதல்களையும் இன்னும் வழங்காமல் இருக்கிறார்.

ட்ரம்ப் இன்னும் பைடனின் வெற்றியை ஏற்றுக் கொள்ளவில்லை, தான் தான் ஜெயித்ததாக கூறி வருகிறார். அதனால் ஜனநாயகக் கட்சியினரை பதவியேற்க விடாமல் இடையூறு செய்வார் என்று அங்கு ஒரு தெளிவற்ற நிலை இருந்து வருகிறது.

நவீன காலக்கட்டத்தில் மக்களாட்சியில் தனக்கு அடுத்து அதிபராக தேர்வு செய்யப்பட்டவருக்கு வெளியேறும் அதிபர் இடையூறுகள் அளித்ததாக வரலாறு இல்லை. கரோனா மக்கள் பெருந்தொற்றுக்கு இடையில் மக்கள் பைடனை தேர்வு செய்துள்ளனர், எனவே அவர் கரோனாவுக்கு எதிரான செயல்திட்டங்களை அறிவிக்க வேண்டியுள்ளது, இதில் தேவையற்ற தாமதம் செய்தால் அது மக்கள் விரோதமான செயலாகவே இருக்கும் என்று அங்கு ட்ரம்ப் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

பைடன் ஆதரவாளர் ஜென் சாகி என்பவர் மேற்கொண்ட ட்வீட்டில், “அமெரிக்க மக்களின் எண்ணத்தை பிரதிநிதித்துவம் செவதுதான் அமெரிக்க அரசு என்றால் அதிகார மாற்றத்தை இடையூறு செய்யக் கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த சனியன்று அமெரிக்காவின் 46வது அதிபராக பைடன் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் வெளியேறும் அதிபர் புதிதாக வரும் அதிபருக்கு அதிகார மாற்றத்தில் உறுதுணையாக இருப்பதுதான் மரபு.

ஆனால் பைடனிடம் ஆட்சி மாற வேண்டுமென்றால் ஜிஎஸ்ஏ முதலில் பைடன் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார் என்பதை அங்கீகரிக்க வேண்டும். சட்ட ரீதியாக இது தெளிவற்று இருப்பதால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றன.

ஜிஎஸ்ஏ தலைமை பாரபட்சமின்றி தனித்துவமாகச் செயல்படுவது அவசியம். சிலபல தலைவர்கள், ஆட்சியதிகார முக்கியஸ்தர்கள் பைடன் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியரசுக் கட்சியின் வாழும் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், பைடனுக்கான வாழ்த்து செய்தியில், ‘பைடன் நல்ல மனிதர், நம் நாட்டை வழிநடத்தி ஒற்றுமையை நிலைநாட்ட அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது’ என்றார்.

இந்நிலையில் சட்டப்போராட்டங்களை விடுத்து பைடனுக்கு வழிவிடுங்கள் ட்ரம்ப் என்ற குரல்கள் அமெரிக்காவில் வலுத்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x