Last Updated : 08 Nov, 2020 10:21 AM

 

Published : 08 Nov 2020 10:21 AM
Last Updated : 08 Nov 2020 10:21 AM

அதிபர் அலுவலகத்துக்குள் நுழையும் முதன் பெண் நான்தான். ஆனால், நானே கடைசியாக இருந்துவிடக்கூடாது. : கமலா ஹாரிஸ் வெற்றிப் பேச்சு

அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடனைத் தேர்வு செய்து, தேசத்துக்குப் புதிய நாளை நீங்கள் உறுதி செய்துள்ளீர்கள். எங்கள் முன் இருக்கும் பாதை எளிதானது அல்ல. இப்போதிருந்து உண்மையான பணி தொடங்கியுள்ளது என்று துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் உற்சாகத்துடன் தெரிவித்தார்.

அமெரிக்க வரலாற்றில் துணை அதிபராக முதன்முதலில் பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றால் அது கமலா ஹாரிஸ்தான். இந்தியாவை, குறிப்பாகத் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர், அமெரிக்கக் கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் முதன்முதலில் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்தல் வெற்றிக்குப் பின் அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் ஜோ பைடனும், துணை அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் கமலா ஹாரிஸும் மக்களுக்கு வில்மிங்டனில் உள்ள டெலாவேர் நகரில் சனிக்கிழமை இரவு உரையாற்றினர்.

இதில் துணை அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் கமலா ஹாரிஸ் பேசியதாவது:

''அடுத்த 4 ஆண்டுகளுக்கான நல்லதொரு தீர்ப்பை தேசத்தின் மக்கள் இன்று வழங்கியுள்ளார்கள். உண்மையான பணி இப்போதுதான் தொடங்கி இருக்கிறது.

இந்த நாளுக்காக நீ தயாராக இருக்கவேண்டும் என்று தாய் ஷியாமளா கோபாலன் அடிக்கடி கூறுவார். நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களித்திருக்கலாம் அது பிரச்சினையில்லை. நான் துணை அதிபராகவும், ஜோ பைடன் அதிபராகவும் செயல்படுவோம்.

முன்னாள் அதிபர் ஒபாமா விசுவாசிகளாக, நேர்மையாக, ஒவ்வொரு நாள் தூக்கத்திலிருந்து எழும்போதும் உங்களைப் பற்றியும், உங்கள் குடும்பத்தைப் பற்றியும் சிந்திப்போம். ஏனென்றால்தான் இப்போதுதான் உண்மையான பணி தொடங்கியுள்ளது. அமெரிக்காவுக்குப் புதிய நாளை உறுதியளித்துள்ளீர்கள்.

அதிபர் அலுவலகத்துக்குள் நுழையும் முதன் பெண் நான்தான். ஆனால், நானே கடைசியாக இருந்துவிடக்கூடாது. என்னுடைய வாழ்வில், நான் இங்கு நிற்க முக்கியக் காரணமாக இருந்தவர் என்னுடைய தாய் ஷியாமளா கோபாலன். என் மனதில் எப்போதும் நிறைந்தவர்.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அவர் வந்தபோது 19 வயது இருக்கும். இந்தத் தருணத்தை நிச்சயம் அவர் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்கமாட்டார். ஆனால், அமெரிக்காவில் இதுபோன்ற தருணங்கள் சாத்தியம் என்று என் தாய் நம்பினார்.

ஆதலால், நான் என் தாயைப் பற்றியும், அவரின் தலைமுறைகளான கருப்பினப் பெண்களைப் பற்றியும் சிந்திக்கிறேன். எனக்கு ஆதரவளித்த ஆசிய மக்கள், வெள்ளையின மக்கள், அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட பெண்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

சமத்துவம், சுதந்திரம், அனைவருக்குமான நீதி ஆகியவற்றுக்காக பெண்கள் போராடியுள்ளார்கள், தியாகங்களைச் செய்துள்ளார்கள். அதிலும் கருப்பினப் பெண்கள் அதிகமான தியாகங்களைச் செய்துள்ளார்கள். அதிகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெண்கள்தான் இந்த ஜனநாயகத்தின் முதுகெலும்பு என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார்கள்.

அனைத்துப் பெண்களும் நூற்றாண்டுகளாக தங்களின் உரிமையைப் பாதுகாக்கப் போாரடியும், பணியாற்றியும் வருகிறார்கள். 100 ஆண்டுகளுக்கு முன் 19-வது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 55 ஆண்டுகளுக்கு முன் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றோம். இப்போது 2020ஆம் ஆண்டு புதிய தலைமுறைக்கான பெண்கள் தங்களின் வாக்களிக்கும் உரிமையால், தொடர்ச்சியான போராட்டத்தால், இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்கள்.

அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு சின்னஞ்சிறு பெண் குழந்தையும், இந்த தேசம் சாத்தியத்துக்கான வாய்ப்புகளை வழங்குகிறது என்று பார்க்கிறது. நம் தேசத்தின் குழந்தைகள், பாலின வேறுபாடின்றி, தெளிவான செய்தியை வழங்கியிருக்கிறது.

லட்சியத்துடன் கனவு காணுங்கள். உறுதியுடன் வழிநடத்துங்கள். மற்றவர்கள் உங்களைப் பார்க்காத கோணத்தில் உங்களைப் பாருங்கள். ஏனென்றால் அவர்கள் இதற்கு முன்பு அவ்வாறு உங்களைப் பார்த்ததில்லை. மேலும் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நாங்கள் உங்களைப் பாராட்டுவோம்.

கடினமான பணி, அத்தியாவசியமான பணி, சிறந்த பணி. அத்தியாவசியமான பணிதான் மக்களைக் காத்து, கரோனாவைத் தோற்கடிக்கும். நம் தேசத்தின் பொருளாதாரத்தைக் கட்டமைக்க தொழிலாளர்களுக்காக உழைக்க வேண்டும்.

நம்முடைய நீதிமுறையிலிருந்தும், சமூகத்திலிருந்தும் இனவெறியைப் பிடுங்கி எறிய வேண்டும். நம் தேசத்தை ஒற்றுமைப்படுத்தி, தேசத்தின் ஆன்மாவைக் குணப்படுத்த வேண்டும். இதற்கான பாதை நமக்கு எளிதானது அல்ல என்பதை அறிவேன். ஆனால் அமெரிக்காவும் தயாராக இருக்கிறது. நானும் ஜோ பைடனும் தயாராக இருக்கிறோம்''.

இவ்வாறு கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x