Published : 07 Nov 2020 06:10 PM
Last Updated : 07 Nov 2020 06:10 PM

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் 8 நாட்களாக கரோனா இல்லை

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் தொடர்ந்து 8 நாட்களாக கரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.

இதுகுறித்து ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “விக்டோரியா மாகாணத்தில் கரோனா தொற்று குறைந்துள்ளது. 8 நாட்களாக விக்டோரியாவில் யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதனைத் தொடர்ந்து விக்டோரியாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், ஆஸ்திரேலியாவில் 12 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன், விக்டோரியா மாகாணங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னரே ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது. கரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 27,652 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,440 பேர் குணமடைந்துள்ளனர். 907 பேர் பலியாகி உள்ளனர்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 4.9 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. இதனால் பல நாடுகளில் கரோனா பரவத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x