Last Updated : 06 Nov, 2020 01:18 PM

 

Published : 06 Nov 2020 01:18 PM
Last Updated : 06 Nov 2020 01:18 PM

மிகப்பெரிய சாதனை: அமெரிக்காவில் 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரிப்பு 

அமெரிக்க வரலாற்றில் கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்த முறை நடந்த அதிபர் தேர்தலில் அதிகபட்சமாக வாக்குப்பதிவு நடந்துள்ளது என்று தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் 59-வது அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளராக செனட்டர் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸும் 2-வது முறையாகப் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த முறை வாக்களிக்க 23.90 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர். நவம்பர் 3-ம் தேதி நடந்த தேர்தலில் இதுவரை 16 கோடி பேர் வாக்களித்துள்ளனர். அதாவது 66.9 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த 1900 ஆம் ஆண்டுக்குப் பின் நடந்த அதிகபட்ச வாக்குப்பதிவு இந்த முறைதான் நடந்துள்ளது. 1900 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த தேர்தலில் 73.7 சதவீதம் வாக்குகள் பதிவாயின. அதன்பின் 120 ஆண்டுகளுக்குப் பின் இந்த முறைதான் அதிகமாக வாக்குப்பதிவு நடந்துள்ளது.

இன்னும் பல்வேறு மாநிலங்களில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால் வரும் நாட்களில் வாக்களித்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

இதுகுறித்து ப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் மிகேல் பி மெக்டோனல்ட் கூறியதாவது:

“அமெரிக்காவில் கடந்த 120 ஆண்டுகால வரலாற்றில் இந்த அதிபர் தேர்தலில்தான் அதிகபட்சமாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்துவருவதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் 56 சதவீதம் வாக்குகள் பதிவாயின. 2008இல் 58 சதவீதம் வாக்குகள் பதிவாயின. ஆனால், இந்தத் தேர்தலில் 66.9 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மின்னசோட்டா, மைனி ஆகிய மாநிலங்களில் இந்த முறை அதிகபட்சமாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. மின்னசோட்டாவில் 79.2 சதவீதமும், மைனியில் 78.6 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் மைனி, ஐயோவாவில் அதிபர் ட்ரம்ப்பும், மின்னசோட்டாவில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனும் வென்றுள்ளனர்.

70 சதவீதத்துக்கும் அதிகமாகப் பல்வேறு மாகாணங்களில் வாக்குப்பதிவு நடந்தது. குறிப்பாக கொலராடோ (77.1%) கனெக்ட்கட் (71.1%), டெலாவேர் (70.8%), ப்ளோரிடா (72.9%), மேரிலாந்து (72.2%), மசாசூசெட்ஸ் (73.4%), மிச்சிகன் (73.5%), மோன்டானா (72.3%) வாக்குகள் பதிவாயின. மிகவும் குறைவாக அர்கானாஸ் மாகாணத்தில் 56.1% வாக்குகள் பதிவாயின.

இதுவரை கிடைத்த தகவலின்படி, ஜோ பைடன் 7.20 கோடி வாக்குகள் பெற்றுள்ளார். இது கடந்த 2016-ல் ஹிலாரி கிளிண்டன் பெற்ற வாக்குகளைவிட 80 லட்சம் அதிகமாகும். ஆனால், அதிபர் ட்ரம்ப் இதுவரை 6.85 கோடி வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். அமெரிக்காவில் அதிகபட்சமாக வாக்குப்பதிவு நடந்ததில் 69 சதவீதம் ஹிஸ்பானிஸ் சமூகத்தைச் சேராத வெள்ளையின அமெரிக்க மக்கள்தான் காரணம். மொத்த வாக்களிப்பில் கறுப்பினத்தவர்கள் 11 சதவீதம் பேருக்குப் பங்கு உள்ளது’’.

இவ்வாறு மெக்டோனல்ட் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x