Published : 05 Nov 2020 09:04 AM
Last Updated : 05 Nov 2020 09:04 AM

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தினசரி பாதிப்பு எண்ணிக்கை எகிறுகிறது...மேலும் ஒரு லட்சம் பேர் பலியாகும் அபாயம்: நிபுணர்கள் கடும் எச்சரிக்கை

கரோனா வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைத்து வருகிறது, ட்ரம்ப் நிர்வாகம் சரியாகக் கையாளாமல் அதை அப்படியே விட்டு விட்டதால் தினசரி கரோனா வைரஸ் எண்ணிக்கை புதிய சாதனையை நோக்கி எகிறி வருவதாக நிபுணர்கள் பலர் கூறியுள்ளனர்.

ஆனால் ஜனவரி 20, 2021 வரை அதிபராக நீடிக்கவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் கரோனா குறித்து எந்த கவலையும் அக்கறையும் இல்லாமல் அதிகாரத்தைப் பிடிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி என்று சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது.

எகிறும் கரோனா நோய்த்தொற்றுக்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ஜோ பைடன் அதிபரானாலும் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.

பொதுச்சுகாதார நிபுணர்கள் இந்த புதிய பரவலையடுத்து பயங்கர விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர். அதுவும் குறுகிய காலத்தில் இந்த விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கின்றன.

ட்ரம்ப்பின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வரை நீடிக்கும். இண்டஹ் 86 நாட்களில் கரோனாவுக்கு அமெரிக்கர்கள் மெலும் 1 லட்சம் பேர் பலியாகும் அபாய சூழ்நிலை நிலவுகிறது அதற்குள் தேசம் வேறொரு நடவடிக்கைக்கு மாற வேண்டும் என்ரு அமெரிக்க பல்கலைக் கழக இயக்குநரான டாக்டர் மர்ஃபி என்பவர் எச்சரிக்கிறார்.

கரோனா தினசரி பாதிப்பு விகிதம் 45%-ஐயும் கடந்த இரு வாரங்களாகக் கடந்து வருகிறது. 7 நாட்களில் சராசையாக 86,352 பேருக்கு தினசரி கரோனா பாதித்து வருகிறது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவிக்கிறது.

பலி எண்ணிக்கையும் சராசரியாக தினசரி 846 மரணங்கள் என்பதாக உள்ளது. ஏற்கெனவே பலி எண்ணிக்கை 2,32,000த்தைக் கடந்து சென்றுள்ளது. உறுதி செய்யப்பட்ட கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 90 லட்சத்தை ஏற்கெனவே கடந்து விட்டது.

இவை உலகிலேயே மிகவும் பெரிய எண்ணிக்கை, உலகின் பணக்கார நாடான அமெரிக்காவில் இந்த அளவுக்கு மோசமான நிர்வாகம் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

டெக்ஸாசில் புதனன்று 126 பேர் கரோனாவுக்கு பலியாக மேலும் 9,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மிசவ்ரி நெப்ராஸ்கா, ஒக்லஹாமா மருத்துவமனைகளில் தினசரி கரோனா நோயாளிகள் சேரும் விகிதம் சாதனை அளவை எட்டுவதாக தகவல்கள் வருகின்றன.

இந்த வைரஸ் நாளுக்குள் நாள் எகிறவே செய்யும் ஏதாவது தடுத்து நிறுத்தும் உத்திகளை முறைகளைக் கண்டுபிடிக்கவில்லை எனில் தானாகவே இது போய் விடும் என்பதெல்லாம் பொய்கள் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

அதிபர் ட்ரம்ப் இதுவரை நாட்டின் முதன்மை மருத்துவ ஆலோசகர்கள் கூறும் பரிந்துரைகளையெல்லாம் புறக்கணித்தார். ட்ரம்ப்பே எச்சரிக்கைகளைப் புறக்கணித்து தவறான முன்னுதாரணமாக பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன் மூலம் கரோனா மறைந்து வருகிறது என்ற தவறான பிம்பத்தைக் கட்டமைத்தார், ஆனால் அது பல இடங்களில் எகிறி வருகிறது, வந்துள்ளது என்பதே உண்மை.

இதுவரை அமெரிக்க உணவு-மருந்துக் கழகம் ஒரே ஒரு மருந்துக்குத்தான் அனுமதி வழங்கியுள்ளது, அது ரெம்டெசிவைர், இதுவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு மட்டுமே. டெக்சாமெதாசோன் தீவிரமாக பாதிக்கப்படுபவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் கரோனா மூன்றாவது ,இரண்டாவது அலை அடிப்பதால் லாக்டவுன்களுக்குள் செல்ல முடிவெடுத்துள்ளன. ஆனால் ட்ரம்ப் லாக்டவுனுக்கு எதிரானவர். தேசிய மட்டத்தில் கரோனாவுக்கு எதிராக எந்த ஒரு உத்தியும் ட்ரம்ப் நிர்வாகத்திடம் இல்லை, மாறாக அது ஒன்றும் அபாயம் அல்ல என்ற போக்குதான் தலைதூக்கியுள்ளது. எனவே மக்களே தாங்கள் ஆரோக்கியத்துக்கான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதுதான் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

-ஏஜென்சி தகவல்களுடன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x