Published : 03 Nov 2020 08:46 AM
Last Updated : 03 Nov 2020 08:46 AM

வியன்னாவில் 6 இடங்களில் துப்பாக்கிச்சூடு தாக்குதலால் மக்கள் பீதி: பயங்கரவாதத் தாக்குதலில் 2 பேர் பலி பலர் காயம் 

ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் வெவ்வேறு ஆறு இடங்களில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் பலியாக, 15 பேர் காயமடைந்தனர்.

ஆஸ்திரியா ஆட்சித்துறைத் தலைவர் செபாஸ்டியன் குர்ஸ், "இந்த சம்பவத்தை வெறுப்பூட்டும் தீவிரவாத தாக்குதல்" என்று அழைத்துள்ளார். இந்த சம்பவத்தில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தாக்குதலையடுத்து வியன்னாவில் பெரும்பாலான பகுதிகள் காவல்துறையால் சீல் வைக்கப்பட்டு மற்ற பயங்கரவாதிகளைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

வியன்னா நகர மேயர் இந்த சம்பவம் பற்றி கூறும்போது, இதுவரை 15 பேர் காயம் அடைந்ததாகவும் அதில் ஏழு பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

நகரின் மையப்பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு அருகே தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், பயங்கரவாதிகள் அந்த ஆலயத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வந்தார்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஆஸ்திரியாவில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் கடுமையானதையடுத்து, அங்கு தேசிய அளவிலான கட்டுப்பாடுகள் நவம்பர் 2ஆம் தேதி அமலுக்கு வந்தன. இம்மாத இறுதிவரை அங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அங்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நடந்த தாக்குதலை ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். செக் குடியரசு நாட்டை இணைக்கும் ஆஸ்திரியா எல்லையிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

அந்நாட்டு உள்துறை அமைச்சர் கூறும்போது, “இது பயங்கரவாதத் தாக்குதல், நகரின் முக்கியப் பகுதிகளில் ராணுவம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் சுமார் 100 ரவுண்ட் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் போலீஸ் நடவடிக்கைகள் குறித்து பதிவு இட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், இதனால் அவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று வியன்னா மேயர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பயங்கரவாதிகளைத் தேடும் பணி இன்னும் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மேக்ரோன், "தீவிரவாதத்தின் மிரட்டலுக்கு ஐரோப்பா பணிந்து விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். பிரான்ஸில் சமீபத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு வியன்னாவிலும் வெறுப்புணர்வுத் தீவிரவாதம் தலைதூக்கியிருக்கிறது. இது நமது ஐரோப்பா. நேற்று எங்களை தாக்கினர், இன்று எங்களுடைய நண்பரை தாக்கியுள்ளனர். இதை தொடர விடக்கூடாது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x