Published : 26 Oct 2020 06:26 PM
Last Updated : 26 Oct 2020 06:26 PM

அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

அமெரிக்காவில் கடந்த இரண்டு நாட்களாக கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், “கடந்த இரு தினங்களாக கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. அமெரிக்காவில் நேற்று முன்தினம் 79,852 பேரும், நேற்று 84,244 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள 29 மாகாணங்களில் கடந்த சில நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் 88 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x