Published : 24 Oct 2020 05:25 PM
Last Updated : 24 Oct 2020 05:25 PM

பிரான்ஸில் டிசம்பர் வரை கட்டுப்பாடுகள் தொடரும்: மக்ரோன்

பிரான்ஸ் கரோனா பரவலின் இரண்டாம் கட்டத்தை எதிர்கொண்டு வருவதால், டிசம்பர் மாதம்வரை கட்டுப்பாடுகள் தொடரும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறும்போது, “விஞ்ஞானிகளின் கூற்றுப்படி பிரான்ஸில் அடுத்த வருடம் கோடைகாலம் வரை கரோனா பரவல் இருக்கும். இரண்டாம் கட்டக் கரோனா பரவல் தற்போது தொடங்கி இருப்பதால் டிசம்பர் மாதம்வரை கரோனா கட்டுப்பாடுகள் தொடரும்” என்றார்.

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 42,032 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கரோனா தொற்று 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

பிரான்ஸில் மார்சேய் மற்றும் லியோன் ஆகிய நகரங்கள் கரோனா தொற்றால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதனால் அங்கு பள்ளிகள் மூடப்பட்டன.

ஊரடங்கு காலகட்டத்தில் 4,000 என்ற அளவில் பிரான்ஸில் கரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் சமீபநாட்களாக கரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x