Published : 23 Oct 2020 08:24 AM
Last Updated : 23 Oct 2020 08:24 AM

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டார்: 3-வது விவாதத்தில் ஜோ பிடன் சரமாரி குற்றச்சாட்டு

நியூயார்க்

அமெரிக்காவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மீண்டும் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 3-ம் தேதி நடக்கிறது. இதில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபிடன் களம் இறங்கியுள்ளார். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்

அமெரிக்காவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ட்ரம்ப் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

அதிபர் வேட்பாளர்களான டொனால்டு ட்ரம்ப், ஜோ பிடனுக்கு இடையே கடந்த மாதம் 29-ம் தேதி ஓஹியோ மாகாணத்தில் முதல் நேரடி விவாதம் நடந்தது.

ட்ரம்ப்புக்கு கரோனா பரவல் ஏற்பட்டதால், அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நடைபெற இருந்த இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது விவாதம் அக்டோபர் 22 ஆம் தேதி டென்னஸில் உள்ள நாஷ்வில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான மூன்றாவது விவாதம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த விவாத்தில் கலந்து கொண்டு பேசிய ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், அமெரிக்காவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக மீண்டும் விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்பிடம் எந்த திட்டமும் இல்லை. நோயுடன் வாழ பழகிக்கொண்டு விட்டோம் என ட்ரம்ப் கூறினார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என்ன பதில் உள்ளது.

தளர்வுகளை வழங்கும் அரசு, வைரஸ் பரவலை தடுக்க வழிமுறைகளை கையாளவில்லை. கரோனா வைரஸ் பெரிய பிரச்சினையே இல்லை என ட்ரம்ப் ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.

ட்ரம்ப் எதற்காக மாஸ்க் அணிய மறுக்கிறார். ஜனவரி மாதமே கரோனா பற்றி தெரிந்து இருந்தும் ஏன் சொல்லவில்லை.

ஆனால் எங்களிடம் திட்டம் உள்ளது. கரோனா வைரசை முடக்குவதே எங்களது திட்டம், நாட்டை அல்ல. ட்ரம்ப்பின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது.

கடந்தமுறை நடந்த அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. எந்த நாடாக இருந்தாலும் அமெரிக்க தேர்தலில் தலையீட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ரஷ்யாவை பற்றி மட்டும் ட்ரம்ப் ஏன் பேச மறுக்கிறார்.
இவ்வாறு ஜோ பிடன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x