

அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்ட ஸ்னோடனுக்கு ரஷ்யா வழங்கிய அடைக்கலத்தை நீட்டித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்னோடனின் வழகறிஞர் அனாடோலி வியாழக்கிழமை கூறும்போது, “ ரஷ்யா ஸ்னோடனுக்கு வழங்கிய அடைக்கலத்தை நீட்டித்துள்ளது. மேலும் ரஷ்யாவுக்கு நிரந்தரமாக குடிமகனாக இருக்க விரும்பினால் அதற்கான விண்ணப்பத்தை அவரே விண்ணப்பிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்னோடன் அமெரிக்காவுக்கு போக விரும்புகிறார் எனினும் அவர் மீதான வழங்குகள் இன்னும் அங்கு முடிவடையவில்லை. இதனால் தற்போது அவர் அங்கு செல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த 2013 ஆம் ஆண்டு அமெரிக்காவின் உளவு ரகசியங்கள் பலவற்றை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்னோடன்.
பிற நாடுகளின் அரசு செயல்பாடுகளையும், சொந்த நாட்டு மக்களையும் அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து ரகசியமாகக் கண்காணித்து வருவதை அவர் உலகுக்கு பகிரங்கப்படுத்தினார். இதன் காரணமாக அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட எட்வர்டு ஸ்னோடன், அதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.