

ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மீது நடந்த வான்வழித் தாக்குதலில் 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் உள்ளூர் அதிகாரிகள் தரப்பில், “ஆப்கனிஸ்தானில் தக்ஹர் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
ஹசாரா பகுதியில் தலிபான்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான தாக்குதல் நடந்து வருகிறது. இந்தத் தாக்குதல் காரணமாகவே பொதுமக்கள் பலியாகி உள்ளனர். இதில் தலிபான்களும் பலியாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் ஆப்கன் பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர். தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், ஆப்கன் அரசு தலிபான்களை அவ்வப்போது விடுவித்து வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர அவர்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.