

பாகிஸ்தானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,24,744 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை தரப்பில், “ பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 667 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3,24,744 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நேற்று மட்டும் கரோனாவுக்கு 19 பேர் பலியாகினர். கரோனா பலி எண்ணிக்கை 6,692 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் சதவீதம் 95.1% ஆக உள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக 500க்கும் குறைவாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இவ்விரு மாகாணங்களில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
முன்னதாக, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார அமைப்பு பாகிஸ்தானுக்குப் பாராட்டுத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.