Published : 16 Oct 2015 04:15 PM
Last Updated : 16 Oct 2015 04:15 PM
2030-ம் ஆண்டில் 110 அணு மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கி, அமெரிக்காவையும் முந்தும் திட்டத்தை வகுத்துள்ளது சீனா. அமெரிக்காவில் 100 அணு மின்சக்தி நிலையங்கள் உள்ளன. இதற்காக சீனா 78 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்கிறது.
அதாவது அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6 முதல் 8 அணு மின் உற்பத்தி நிலையங்களை கட்டமைக்க சீனா முடிவெடுத்து விட்ட்டது. இதனை பெய்ஜிங்கில் உள்ள சீனா டைம்ஸ் தெரிவித்துள்ளது.
2020-க்குள் மின் உற்பத்தியை 58 கிகாவாட்ஸ் அளவுக்கு உயர்த்த சீனா திட்டமிட்டுள்ளது. 2030-ம் ஆண்டில் 110-க்கும் அதிகமான அணு மின்சக்தி நிலையங்களை உருவாக்கி அமெரிக்காவையும் விஞ்சும் திட்டத்தை செயல்படுத்த சீனா தயாராகிவிட்டதாக சீனா டைம்ஸ் தெரிவித்துள்ளது.
தற்போது 23 அணு மின்சக்தி நிலையங்கள் சீனாவில் உள்ளன. 27 யூனிட்கள் கட்டப்பட்டு வருகின்றன. உலகின் முடிவுறாத அணு மின் சக்தி நிலையங்களில் மூன்றில் ஒரு பங்கு சீனாவினுடையது என்றால் மிகையாகாது.
ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏற்பட்ட உலகை உலுக்கிய பூகம்பம் மற்றும் அதனைத் தொடந்த சுனாமிக்கு புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு ஏற்பட்டதையடுத்து சீனா அணு மின் சக்தி நிலையங்களுக்கு அனுமதி வழங்குவதை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் அதன் பிறகு தீவிர சீராய்வுக்குப் பிறகு தற்போது அனுமதிகளை வழங்கி வருகிறது.
ஆனால் சீன அறிவியல் அகாடமியில் கோட்பாட்டு பவுதிக விஞ்ஞானியான சுவோக்சியு என்பவர் அதே சீனா டைம்ஸில் கூறும்போது, சீனாவில் பாதுகாப்பு தொழில் நுட்பங்கள் சரியாக அமல் செய்யப்படுவதில்லை என்றார்.
அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், முன்னாள் சோவியத் யூனியன் ஆகியவை அணு விபத்துகளைச் சந்தித்துள்ளது என்றார் அவர்.
இதனால் காற்றாலை மற்றும் நீர் மின்சாரத் திட்டங்களுக்கு சீன அரசு முக்கியத்துவம் தர வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
ஆனால் சீனா எரிசக்தி ஆய்வுச் சங்கத்தின் துணை இயக்குன ஸூ தாதி கூறும்போது, “சீனா தங்களது மொத்த மின் உற்பத்தியில் அணு மின்சக்தி மூலம் 2% மின்சாரத்தையே உற்பத்தி செய்கிறது” என்றார்.
சீனா தனது புதிய 1100 மெகாவாட் அணு மின் தொழில்நுட்பத்தை விற்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது, இதற்கு பாகிஸ்தான், அர்ஜெண்டீன நாடுகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT