Published : 18 Oct 2020 07:05 AM
Last Updated : 18 Oct 2020 07:05 AM

பாகிஸ்தானில் உள்ள பள்ளி மாணவர்களை தூண்டிவிடும் வகையில் இந்து, யூதர்களுக்கு எதிராக பாடம் நடத்துகின்றனர்: ஐ.நா.வில் பலூச் சங்க தலைவர் கடும் குற்றச்சாட்டு

புதுடெல்லி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸை தலைமையிடமாகக் கொண்டு, பலூச் வாய்ஸ் அசோசியேஷன் என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைவர் முனீர் மெங்கல். அரசியல் விமர்சகர், ஆராய்ச்சியாளர், உரிமைகளுக்காகப் போராடுபவர், அரசு சாரா அமைப்பின் தலைவர் என பன்முகத் திறமை கொண்டவர் இவர்.

பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் அங்குள்ள மக்களின் மனித உரிமைகளுக்காகப் போராடி வருகிறார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாகிஸ்தான் அரசு, ராணுவத்தின் அத்துமீறல்களை வெளி உலகத்துக்கு கொண்டு வருவதற்கு அவர் தயங்கியதே இல்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஐ.நா. சபையின் கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்றது. அதில் முனீர் மெங்கல் பேசியதாவது:

நான் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவத்தால் நடத்தப்படும் பள்ளியில் படித்தேன். இங்குள்ள பள்ளிகளில் நடத்தப்படும் முதல் பாடமே, இந்துக்கள் எதிர்ப்பு மற்றும் யூதர்களுக்கு எதிரான பாடம்தான். இந்துக்கள் என்றாலே துரோகிகள் என்றுதான் முதல் பாடமே நடத்தப்படுகிறது. யூதர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள். இவர்கள் இருவருமே எந்தக் காரணமுமே இல்லாமல் கொல்லப்பட வேண்டியவர்கள்தான் என்று பாடம் நடத்தப்படுகிறது.

பாகிஸ்தானில் இன்று கூட ராணுவ பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கற்றுத் தரும் முதல் பாடம் என்பது துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் வணங்க வேண்டும் என்பதுதான். இவற்றை இந்து தாய்மார்கள் மீது பிரயோகித்து அவர்களைக் கொல்ல வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் இந்துக் குழந்தைகளுக்கு தாயாகி விடுவார்கள் என்றுதான் ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.

அரசு மற்றும் ராணுவத்தால் இயங்கும் பள்ளிகளும் பல ஆண்டுகளாக மதரஸாக்களில் படித்த ஆசிரியர்கள் மூலமாக அடுத்த தலைமுறையை படிப்படியாக தீவிரமயமாக்கி வருகின்றன. அதிகளவில் நிதியளிக்கப்பட்ட மதரஸாக்கள், அதிநவீன தீவிரவாத பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு, 'திருக்குரான் மொழிபெயர்ப்பு' வகுப்புகளில் கலந்து கொள்ளாவிட்டால் எந்த பல்கலைக்கழகமும் மாணவர்களுக்கு பட்டம் வழங்காது என்று பஞ்சாப் மாகாண அரசு அறிவித்திருந்தது. அந்த அளவுக்கு அங்கு மத துவேஷம் நடக்கிறது.

பாகிஸ்தானிலுள்ள பலூச் இனத்தவர் உட்பட சிறுபான்மையினரின் அசல் அடையாளங்களை பாகிஸ்தான் அரசு பல்வேறு விதங்களில் நீக்கி வருகிறது. ஏராளமான மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து விட்டனர். உள்ளூர் பலூச் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. குடிக்கத் தண்ணீர் கூட இல்லை. அதே நேரத்தில் சீன மக்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.

இவ்வாறு முனீர் மெங்கல் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x