Published : 14 Oct 2020 07:01 AM
Last Updated : 14 Oct 2020 07:01 AM

அருணாச்சல், லடாக்கை அங்கீகரிக்கவில்லை: இந்தியா மீது சீனா குற்றச்சாட்டு

சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் நேற்று பெய்ஜிங்கில் கூறியதாவது:

எல்லைப் பகுதியில் இந்திய அரசு, பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. லடாக் பகுதியில் மிகப்பெரிய நெடுஞ்சாலையை இந்தியா அமைத்து வருகிறது. லடாக் மற்றும் அருணாச்சல் பிரதேச மாநிலங்களில் தற்போது இந்திய அரசு பல்வேறு பாலங்களைக் கட்டி வருகிறது. சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு எளிதில் செல்லும் வகையில் இந்தப் பாலங்கள் அமைந்துள்ளன. இதுதவிர, எல்லையில் அதிகளவில் துருப்புகளை இந்திய அரசு நிறுத்தியுள்ளது. இதுவே எல்லையில் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்துக்குக் காரணம்.

முதலாவதாக, அருணாச்சல் பிரதேசமும், சட்டவிரோதமாக இந்திய அரசு அமைத்துள்ள லடாக் யூனியன் பிரதேசத்தையும் சீனா அங்கீகரிக்கவில்லை என்பதைநான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சீன - இந்திய எல்லையின் மேற்கு பகுதியில் இந்தியாவின் நிர்வாக அதிகார வரம்பில் உள்ள சீனாவின் நிலப்பரப்பை இந்தியா எடுத்துக் கொள்வதை சீனா எப்போதும் எதிர்க்கிறது.
எல்லைப் பகுதியில் ராணுவ மோதலை நோக்கமாகக் கொண்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம். இரு தரப்பினரின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில், எல்லையில் உள்ள பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜாவோ லிஜியன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x