Published : 13 Oct 2020 03:17 PM
Last Updated : 13 Oct 2020 03:17 PM
கரோனாவுக்கான தடுப்பு மருந்து இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பதிவு செய்யப்படும் என்று உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் மூத்த மருத்துவ நிபுணர் சவுமியா சுவாமிநாதன் கூறும்போது, “தற்போதுவரை சுமார் 40 கரோனா தடுப்பு மருந்துகள் ஆய்வில் உள்ளன. இதில் 10 மருத்துகள் ஆய்வின் கடைசிக் கட்டத்தில் உள்ளன. எனவே, கிடைத்துள்ள தரவுகளை வைத்துப் பார்த்தால் கரோனா தடுப்பு மருந்து இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பதிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ஹெர்டு இம்யூனிட்டி நியாயமற்றது
இந்த நிலையில் கரோனாவுக்கு எதிரான குழு எதிர்ப்பு சக்தி (ஹெர்டு இம்யூனிட்டி) நெறிமுறையற்றது, நியாயமற்றது என்று உலக சுகாதார அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் குழு நோய் எதிர்ப்பு சக்திக்கு (ஹெர்டு இம்யூனிட்டி) எதிரான கருத்தை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் கூறும்போது, “பொது சுகாதார வரலாற்றில் ஒருபோதும் குழு நோய் எதிர்ப்பு சக்தி பெருந்தொற்றுக் காலத்தில் பயன்பட்டது கிடையாது. கரோனாவுக்கு எதிரான குழு நோய் எதிர்ப்பு சக்தி நெறிமுறைக்கு உட்பட்டது இல்லை. குழு நோய் எதிர்ப்பு சக்தி குறித்து நமக்குச் சில துளிகள்தான் தெரிந்துள்ளன. முழுமையாக இல்லை. பயங்கரமான வைரஸை அனைவருக்கும் பரப்புவது என்பது நியாயமற்றது. மேலும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் இருக்கும் என்றும் தெரியவில்லை” என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT