Published : 12 Oct 2020 07:36 PM
Last Updated : 12 Oct 2020 07:36 PM
ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 272 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் சமீபத்தில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும்.
இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில், ''ஈரானில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிகபட்சமாக 272 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 28,816 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,206 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரானில் சமீபநாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பொதுமக்கள் அதிக எண்ணிகையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.
ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT