Published : 10 May 2014 10:00 AM
Last Updated : 10 May 2014 10:00 AM

தென்னாப்பிரிக்காவில் மீண்டும் அதிபராகிறார் ஜேக்கப் ஜுமா: ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸுக்கு 5-வது தொடர் வெற்றி

தென்னாப்பிரிக்காவில் நடை பெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி (ஏஎன்சி) தொடர்ந்து 5-வது முறையாக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, இப்போதைய அதிபர் ஜேக்கப் ஜுமா (72) 2-வது முறையாக அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

கடந்த டிசம்பரில் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா இறந்த பிறகு, கடந்த புதன்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை 95 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இதில் ஆளும் கட்சிக்கு 62.5 சதவீத வாக்குகள் கிடைத் துள்ளது. இதன்மூலம் இந்தக் கட்சி வெற்றி பெறுவது உறுதி யாகி விட்டது. சனிக்கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய எதிர்க்கட்சியான ஜன நாயக கூட்டணிக்கு 22 சதவீத வாக்குகளும் பொருளாதார சுதந்திர போராட்ட கட்சிக்கு 6 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைய புள்ளிவிவரம் கூறுகிறது.

இனவெறி முடிவுக்கு வந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு 5-வது முறையாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் 29 அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. ஜேக்கப் ஜுமா தலைமையிலான அரசில் ஊழல் நடைபெற்றதாகவும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்ததாகவும் எதிர்க்கட்சிகள் புகார் கூறின. இதையெல்லாம் மீறி ஆளும் கட்சி மீண்டும் அமோக வெற்றி பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x