Published : 10 Oct 2020 07:16 AM
Last Updated : 10 Oct 2020 07:16 AM

நாய்களை பயன்படுத்தி கரோனா பரிசோதனை: பின்லாந்தில் விசித்திர முயற்சி

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மோப்ப நாய்களைக் கொண்டு கண்டறியும் விசித்திர முயற்சியில் பின்லாந்து அரசு இறங்கியுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, உலக நாடுகள் பரிசோதனைகளை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பணியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, அனைத்து நாடுகளில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் உடல் வெப்ப அளவு பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பின்லாந்து நாட்டின் தலைநகர் ஹெல்சின்கி விமான நிலையத்தில் புதிய வகை கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதாவது, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய்களை பயன்படுத்தி, கரோனா நோயாளிகளை கண்டறியும் பணி அங்கு தொடங்கியுள்ளது.

விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளிடம் ஒரு பருத்தி துணி கொடுக்கப்படும். அந்தத் துணியை பயணிகள் தங்கள் கழுத்துப் பகுதியில் துடைத்துவிட்டு திருப்பி வழங்க வேண்டும். பின்னர், அந்தத் துணியானது பயிற்சியாளர்கள் மூலமாக நாய்களிடம் கொண்டு செல்லப்படும்.

ஒருவேளை, சம்பந்தப்பட்ட பயணிக்கு கரோனா பாதிப்பு இருந்தால், அந்த நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருக்கும். இதனை வைத்து, அதன் பயிற்சியாளர்கள் அந்தப் பயணிக்கு கரோனா பாதிப்பு இருப்பதை தெரிந்து கொள்வார்கள். இதையடுத்து, குறிப்பிட்ட பயணிக்கு மருத்துவ முறையிலான கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

ஒரு வாரமாக நடைபெற்று வரும் இச்சோதனை, பெரிய அளவில் வெற்றி பெற்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இதனை பின்லாந்து முழுவதும் விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x