Published : 09 Oct 2020 05:57 PM
Last Updated : 09 Oct 2020 05:57 PM
வடகிழக்கு இங்கிலாந்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இங்கிலாந்து ஊடகங்கள் தரப்பில், “பல்கலைக்கழகங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நியூகேஸ்டல் பல்கலைக்கழகத்தில் 1,003 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நார்தும்பிரியா பல்கலைக்கழகத்திலும் கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. டர்ஹம் பல்கலைக்கழகத்திலும் கரோனா பரவல் உள்ளது.
இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் பாடங்கள் நடத்த பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டுள்ளன” என்று செய்தி வெளியாகியுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வி அடைந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது. இந்த நிலையில் பிரிட்டனில் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுவெளியில் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கரோனா பரவல் அக்டோபர் மாதத்தில் தீவிரமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT