Published : 07 Oct 2020 12:47 PM
Last Updated : 07 Oct 2020 12:47 PM
சீன மருத்துவ அகாடமியின் கீழ் அங்குள்ள மருத்துவ உயிரியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து, முதல்கட்டப் பரிசோதனையில் பாதுகாப்பானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், ''மருத்துவ உயிரியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்ட முடிவுகள் பாதுகாப்பானதாகவும், சாதகமாகவும் வந்துள்ளன. முதற்கட்டச் சோதனையில் 191 பேருக்குத் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு மருத்துவப் பரிசோதனைகளின் இறுதிக் கட்டத்தில் சீனாவில் நான்கு தடுப்பூசிகள் உள்ளன.
கரோனா தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளன. எனவே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் உலக நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இவ்வருட இறுதியில் கரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT