Published : 06 Oct 2020 04:31 PM
Last Updated : 06 Oct 2020 04:31 PM

சிரியாவில் அதிகரிக்கும் கரோனா தொற்று

உள்நாட்டுப் போர் நடந்து வரும் சிரியாவில் தொடர்ந்து கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால், அங்கு மருத்துவப் பரிசோதனைகளுக்கு மக்கள் வரத் தயங்குவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து அல்ஜசிரா வெளியிட்ட செய்தியில், “சிரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2 பேர் பலியாகி உள்ளனர்.

இதுவரை சிரியாவில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் சிரியாவில் உள்ள மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் கரோனா பரிசோதனைக்கு வரத் தயங்குகின்றனர்” என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் வசிக்கும் அகமத் கூறும்போது, ''நான் விற்பனையாளராகப் பணிபுரிகிறேன். எனக்கு ஒரு வாரமாக காய்ச்சல், சளி, உடல் வலி போன்றவை உள்ளன. ஆனால், நான் மருத்துவமனைக்குச் செல்லவில்லை. ஏனெனில் அங்கு படுக்கைகளும் கிடையாது. கூடவே ஆபத்தானது” என்று தெரிவித்தார்.

சிரியாவில் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மக்கள் இறக்கிறார்கள் என்றும், இந்தத் தகவலை வெளியிட சிரிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் அங்குள்ள தன்னார்வ அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த நிலையில், சிரியாவில் கரோனா வைரஸ் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கரோனா வைரஸின் தாக்கம் சிரியாவில் அதிகரித்தால் போர்ச்சூழல் நிலவும் அந்நாட்டில் பேரழிவு உண்டாகும் என்று பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x