Last Updated : 03 Oct, 2020 10:00 AM

 

Published : 03 Oct 2020 10:00 AM
Last Updated : 03 Oct 2020 10:00 AM

அணுஆயுத நாடுகளால் உலகம் அணு ஆயுதப்போரின் பேரழிவின் நிழலில்  உள்ளது: ஐ.நா. பெருங்கவலை

அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளினால் உலகம் அணு ஆயுதப்போரின் பேரழிவின் நிழலில் வாழ்ந்து கொண்டிருப்பதாக ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ கட்டரஸ் கவலை தெரிவித்துள்ளார்.

‘அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழித்தல் உலக தினம்’ தொடர்பாக ஐநா தலைவர் கட்டரஸ் உயர்மட்ட கூட்டம் ஒன்றில் இந்த ஆபத்துக் குறித்த எச்சரிக்கையை விடுத்தார்.

அதாவது அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளிடையே தொடரும் பகைமை, நம்பிக்கையின்மை, பதற்றங்கள் இவ்வாறு யோசிக்கத் துணிவதாக கட்டரஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

உதாரணமாக ட்ரம்ப் நிர்வாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு பதற்றம், அமெரிக்க-ரஷ்ய உறவும் பதற்றமாக உள்ளது. அணு ஆயுதம் வைத்திருக்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகள் காஷ்மீரை வைத்து சண்டையிட்டுக் கொள்கின்றனர். மேலும் இந்தியா-சீனாவும் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன, வடகொரியா ஏற்கெனவே தனது அணு ஆயுத வலு பற்றி பெருமையாகப் பேசி வருகிறது என்பதை நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் பிரச்சினைகளை மையப்படுத்திக் கூறினார் கட்டரஸ்.

அணு ஆயுதங்களை நவீனப்படுத்துதல் என்பது தர அளவிலான அணு ஆயுதப் போட்டிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அணு ஆயுதங்களை அதிகரிப்பதல்ல, மாறாக அதன் வேகத்தையும் திறனையும் அதிகரித்து இன்னும் துல்லியமாக்குவது பற்றிய நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஆயுதக்குறைப்பு ராணுவ ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முடிவுக்கு வருகிறது.

இருநாடுகளும் இந்த ஒப்பந்த காலத்தை நீட்டிக்க வேண்டும், இதில் தாமதிக்கக் கூடாது. 5 ஆண்டுகளுக்கு ஆயுதக்குறைப்பு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும். ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை எனில் மீண்டும் ஆயுதப்போட்டியே ஏற்படும் என்று ஐநா எச்சரித்துள்ளது.

அணு ஆயுதப் பெருக்கத் தடை ஒப்பந்தம் இந்த ஆண்டு அதன் 50வது ஆண்டை எட்டுகிறது. இது மிக முக்கியமானது, இந்த ஒப்பந்தம் மட்டுமே அணு ஆயுதக் குறைப்பையும் அணு ஆயுதப்பரவலையும் தடுக்க முடியும்.

அணு ஆயுதப் பெருக்கத் தடை மற்றும் பரவல் தடுப்பிலிருந்து அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் ஒப்பந்தங்களை நாடுகள் வந்தடைவது நல்லது என்கிறார் கட்டரஸ்.

ஜூலை 2017-ல் 122 நாடுகள் அணு ஆயுதங்களை தடை செய்வது பற்றிய ஒப்பந்தத்தை முன்னெடுத்தன. 50 நாடுகள் இதற்கு ஒப்புதல் தெரிவித்தால் 90 நாட்களில் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து விடும். மலேசியா செப்.30ம் தேதி இதற்கு ஒப்புதல் தெரிவித்ததையடுத்து தற்போது சம்மதம் தெரிவித்த நாடுகள் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது, ஆனால் குறைந்தது 50 நாடுகளின் ஒப்புதல் தேவை.

வெள்ளிக்கிழமையன்ரு 193 ஐநா உறுப்பு நாடுகளில் 103 நாடுகள் உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டன. ரஷ்யா, சீனா போன்ற பெரிய அணு ஆயுத நாடுகள் பட்டியலில் இருந்தன, ஆனால் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட்டத்தைத் துறந்தன. வடகொரியா, இஸ்ரேலும் கூட்டத்திற்கு வரவில்லை.

இந்தியாவும் பாகிஸ்தானும் பேசவிருக்கின்றன. ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதல் போரில் 210,000 பேர் பலியானதை பேசிய பலரும் நினைவு கூர்ந்தனர். இந்த தாக்குதலுக்கு 75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டம் நடந்ததை பலரும் குறிப்பிட்டனர்.

ஈரான் அயலுறவு அமைச்சர் மொகமட் ஜாவேத் ஜரீஃப் பேசும்போது, இந்தக் கூட்டம் உலகம் அணு ஆயுதப் போர் எனும் பேரழிவு துர்கனவிலிருந்து விடுதலி பெற நல்வாய்ப்பாக அமையும் என்றார்.

மேலும் அவர் அமெரிக்கா புதிய அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும் 2015-ல் ஈரானுடனான என்பிடி ஒப்பந்தத்திலிருந்து அதிபர் ட்ரம்ப் வெளியேறி பெரிய சேதத்தை ஏற்படுத்தி விட்டார் என்று குற்றம்சாட்டினார். அதே போல் இஸ்ரேல் தனது டி.என்.ஏவிலேயே போர்க்குணம் கொண்டது, அந்நாட்டை அணு ஆயுதங்களிலிருந்து வெளியே வர உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் என்றார்.

உலகை அழிக்கும் ஆயுதங்களுக்கு ஏன் நிதியை விரயம் செய்ய வேண்டும், இதையே கோவிட்-19-ஐ ஒழிக்கப் பயன்படுத்தலாமே, என்றார் ஈரான் அமைச்சர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x