

கரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட அவசர நிலையை அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்க இத்தாலி அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து இத்தாலி அரசு ஊடகம் தரப்பில் வெளியிட்ட செய்தியில், “கரோனா தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் விதிக்கப்பட்ட அவசர நிலையை ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எனினும் இவ்வருட இறுதிவரை அவசர நிலையைத் தொடர அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா, கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை அதன் இயல்பு வாழ்க்கையிலிருந்து நகர்த்தியுள்ளது.
அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இத்தாலியில் மார்ச் மாதத்தில்அதிக பாதிப்பைச் சந்தித்த கரோனா தாக்கம் அதன்பின்னர் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இந்த நிலையில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை இத்தாலி அரசு எடுத்து வருகிறது.
இத்தாலியில் 3,14,861 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.