Last Updated : 01 Oct, 2020 10:53 AM

 

Published : 01 Oct 2020 10:53 AM
Last Updated : 01 Oct 2020 10:53 AM

விவாதத்தில் நான் தான் ஜெயித்தேன்... பிடனின் ‘அபாயகரமான திட்டம் அம்பலம்’- அதிபர் ட்ரம்ப் முழக்கம்

அமெரிக்க அதிபர் டோனால்டு ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் இடையே நேற்று முதல் விவாதம் நடைபெற்றது, இது பெரும்பாலும் கூச்சலும் குழப்பமுமாகவே முடிந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் விவாதத்தில் ‘நான் தான் ஜெயித்தேன்’ என்று அதிபர் ட்ரம்ப் கூறிவருகிறார்.

மேலும் விவாதத்தில் ட்ரம்பை நோக்கி பிடன் ட்ரம்ப் ஒரு பொய்யர் என்றார், இதற்குப் பதிலடியாக ட்ரம்பும் 47 ஆண்டுகால பொதுவாழ்க்கையின் பொய்களை தான் அம்பலப்படுத்தி விட்டதாகவும் பிடனின் அபாயகரமான திட்டத்தையும் தான் வெளியே கொண்டு வந்து விட்டதாகவும் ட்ரம்ப் கோரினார்.

மொத்தம் மூன்று முறை அதிபர் வேட்பாளர்கள் விவாதத்தில் ஈடுபட வேண்டும் இதில் முதல் விவாதம் ஓஹியோ, கிளீவ்லேண்டில் செவ்வாய் இரவு நடைபெற்றது, இதில் கோபாவேச இடையீடுகள், கசப்ப்பான குற்றச்சாட்டுகளில் இருவருமே ஈடுபட்டனர். நிறவெறி, பொருளாதாரம், காலநிலை மாற்றம், கரோனா, சுகாதாரம் என்று விவாதம் காரசாரமாக நடந்தது.

ஆனால் இரு குழாமும் தங்களுக்கே வெற்றி என்று முழக்கமிட்டன.

“கடந்த இரவு ஊழல் நிரம்பிய ஊடகம் செய்ய மறுத்ததை நான் செய்தேன். ஜோ பிடனின் 47 ஆண்டுகால பொய்களுக்கு அவரைப் பொறுப்பேற்கச் செய்தேன். 47 ஆண்டுகளின் துரோகம் தோல்வியை ஒப்புக் கொள்ளச் செய்தேன்.

அமெரிக்க வேலைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தார், உங்கள் கனவுகளையும் ஏற்றுமதி செய்தார், பிடன் இந்த நாட்டை ஆள தகுதி இல்லாதவர், மிகவும் பலவீனமானவர். ஜனநாயக அதிபர் வேட்பாளர் என்னிடம் மோசமாகத் தோற்றுப் போய்விட்டார்.

மீதி விவாதங்களை ரத்து செய்க என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், பிடன் தோற்கவே செய்தார். இனி விவாதங்களை அவர் ரத்து செய்வார், பார்ப்போம் என்ன நடக்கிறது என்று, அப்படி விவாதங்களை அவர் ரத்து செய்தால் அது அவருக்கு நல்லதாக இருக்காது” என்று ட்ரம்ப் விவாதம் குறித்து தெரிவித்தார்.

முதல் விவாதமே கூச்சலும் குழப்பமுமாகப் போனதால் அதிபர் விவாதங்கள் கமிஷன், வரவிருக்கும் விவாதங்களில் ஒரு ஒழுங்கு முறை கடைப்பிடிக்கப்படுவதற்கான புதிய உபகரணங்களை சேர்க்கப் போகிறோம் என்று தெரிவித்துள்ளது.

பிடன் பேசும்போது அவரைப் பேசவிடாமல் இடையூறு செய்ததைத் தவிர ட்ரம்ப் எதையும் செய்து விடவில்லை என்பதே அங்கு விமர்சனமாக உள்ளது.

ஃபாக்ஸ் செய்தி ஒருங்கிணைப்பாளர் கிறிஸ் வாலஸ் பல முறை ட்ரம்பிடம் கெஞ்சினார், தயவு செய்து பிடனை முடிக்க விடுங்கள் என்றார். ஆனால் ட்ரம்ப் கேட்கும் மூடில் இல்லை.

ட்ரம்ப், மேலும் விவாதம் பற்றி கூறும்போது, ‘தன் கட்சியில் சோசலிசம், தீவிர இடது வாதம் இருப்பதை பிடன் ஒப்புக் கொண்டார் ‘ என்று தெரிவித்தார்.

இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக பயணத்தடையை நான் விதித்தேன், ஆனால் அதை நீக்குவேன் என்கிறார் பிடன். அவர்களைத் தடை செய்ய முடியாது என்று என்னிடம் கூறினர், நான் வழக்குகளை இழந்தேன். உடனே நான் தோற்று விட்டேன் என்று கூச்சலிட்டனர். பெரிய பெரிய கதைகள், செய்திகள் வெளிவனதன். பிறகு உச்ச நீதிமன்றத்தில் நானே வென்றேன், இதனை ஊடகம் ரிப்போர்ட் கூட செய்யவில்லை.

என்னுடைய நிர்வாகம் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், குற்றவாளிகள் ஆகியோரை நாட்டை விட்டு வெளியேற்றப் பாடுபட்டது. பிடனின் 47 ஆண்டுகால அரசியல் சாதித்ததை விட நான் கடந்த சில செய்தது சிறந்தது

இப்போது பிடன் தீவிர இடதுசாரிக் கொள்கைகளைப் பேசுகிறார். சமூகப் பாதுகாப்பை பிடன் சிதைத்து விடுவார். சட்ட விரோத குடியேறிகளுக்கெல்லாம் இலவச மருத்துவம் அளித்து மருத்துவ நலத்தையே ஒன்றுமில்லாமல் காலாவதியாக்கி விடுவார்.

பாதுகாப்பான சமூகம், பெரிய வேலைவாய்ப்புகள், அனைத்து அமெரிக்கர்களுக்கும் வரமபற்ற எதிர்காலம் வேண்டுமானால் குடியரசு கட்சிக்கு வாக்களியுங்கள்.

அடுத்த 4 ஆண்டுகளில் அமெரிக்காவை உற்பத்தி சூப்பர் பவராக மாற்றுவோம். சீனாவை நம்பியிருப்பதை முடிவுக்குக் கொண்டு வருவோம்

எனக்கு பிடனுடன் விவாதிப்பதில் எந்த சிக்கலும் இல்லை, அவர்தான் விவாதிக்க முடியாது என்று கூறுவதாக கேள்விப்படுகிறேன். தெரியவில்லை, அது அவரது விருப்பம்.

முதல் விவாதத்தில் நான் வென்றேன், பிடன் மிகவும் பலவீனமானவர், அவர் புலம்பல்வாதி, இவ்வாறு கூறினார் அதிபர் ட்ரம்ப்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x