Published : 30 Sep 2020 12:17 PM
Last Updated : 30 Sep 2020 12:17 PM
இந்தியா உள்ளிட்ட நாடுகள் கரோனாவினால் ஏற்பட்ட இறப்புகள் குறித்த முழு விவரத்தை அளிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து குடியரசுக் கட்சி சார்பாக அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பிடனும் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முதல் விவாத நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது ஜோ பிடன் கரோனாவினால் அமெரிக்காவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ட்ரம்ப்பைக் கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு ட்ரம்ப் பதிலளிக்கும்போது, “நீங்கள் கரோனாவினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை பற்றிக் கூறுவீர்கள் என்றால், சீனாவில் கரோனாவுக்கு எத்தனை பேர் இறந்தார்கள் என்று உங்களுக்கு தெரியாது. ரஷ்யாவிலும், இந்தியாவிலும் கரோனாவுக்கு எத்தனை பேர் இறந்தார்கள் என்று உங்களுக்குத் தெரியாது.
இந்த நாடுகள் கரோனாவினால் ஏற்பட்ட உண்மையான உயிரிழப்புகள் குறித்த தகவலை அளிக்கவில்லை. அமெரிக்கா ஆரம்பத்தில் ஊரடங்கை அமல்படுத்தி லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. நீங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் நீங்கள் மக்களைக் கொன்று இருப்பீர்கள். நாங்கள் செய்த வேலையை உங்களால் செய்திருக்க முடியாது” என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் 74 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT