Published : 28 Sep 2020 09:54 PM
Last Updated : 28 Sep 2020 09:54 PM

தென்கொரிய அதிபருடன் சந்திப்பு: கரோனா தடுப்பு மருந்தை தனக்குச் செலுத்தும் புதின்

ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்தை தனக்குச் செலுத்த இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷ்ய ஊடகங்கள் தரப்பில், “தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சியோலில் சந்திப்பதற்கு முன்னர் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்தை தனக்குச் செலுத்த இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ரஷ்யா இதுவரை வெளியிடவில்லை.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து முதல் தடுப்பு மருந்தைத் தயாரித்தது. இதற்கு ஸ்புட்னிக்-5 எனப் பெயரிட்டு கடந்த மாதம் பதிவு செய்தது.

மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதனைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தி வெற்றி பெற்றதாக ரஷ்யா அறிவித்தது.

ரஷ்யாவில் 11,59,573 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 20,000 க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x