Published : 28 Sep 2020 07:28 PM
Last Updated : 28 Sep 2020 07:28 PM

பிரான்ஸில் இரண்டாம் கட்டக் கரோனா பரவல் தீவிரமாக இருக்கும்: தேசிய மருத்துவக் கவுன்சில் எச்சரிக்கை

கரோனா வைரஸை எதிர்கொள்ளும் சுகாதாரப் பணியாளர்கள் சோர்ந்துவிட்டதால் இரண்டாம் கட்டக் கரோனா பரவலை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் என்று தேசிய மருத்துவக் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தேசிய மருத்துவக் கவுன்சிலின் மூத்த மருத்துவர் கூறும்போது, ''பிரான்ஸில் கரோனா இரண்டாம் கட்டப் பரவல் நாம் எதிர்பார்த்ததைவிட வேகமாகப் பரவுகிறது. முதல்கட்டப் பரவலில் பணியில் இருந்த சுகாதாரப் பணியாளர்கள் சோர்ந்துவிட்டதால் இரண்டாம் கட்டப் பரவல் தீவிரமாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தேசிய மருத்துவக் கவுன்சில் இதுகுறித்து முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், பிரான்ஸ் அரசாங்கம் இதுகுறித்த துரித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரான்ஸில் மார்சேய் மற்றும் லியோன் ஆகிய நகரங்கள் கரோனா தொற்றால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதனால் அங்கு பள்ளிகள் கடந்த வாரம் மூடப்பட்டன.

ஊரடங்கு காலகட்டத்தில் 4,000 என்ற அளவில் பிரான்ஸில் கரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் சமீபநாட்களாக கரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x