எல்லாமே போய்விட்டது, என்னையும் புதைத்துவிடுங்கள்: சடலமாக கரை ஒதுங்கிய சிறுவனின் தந்தை கதறல்

எல்லாமே போய்விட்டது, என்னையும் புதைத்துவிடுங்கள்: சடலமாக கரை ஒதுங்கிய சிறுவனின் தந்தை கதறல்
Updated on
2 min read

துருக்கியின் கோஸ் தீவில் கரை ஒதுங்கிய சிறுவனின் சடலம் அதை போலீஸ்காரர் ஒருவர் கையில் ஏந்திச் சென்ற புகைப்படங்கள் உலக மக்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

அந்த குழந்தையின் தந்தை அப்துல்லா குர்தி. சிரியாவின் கொபேனி நகரைச் சேர்ந்தவர். உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் இருந்து தப்பி தனது மனைவி ரேஹன், குழந்தைகள் காலிப் (5), ஆய்லான் (3) ஆகியோருடன் அவர் கனடாவுக்கு செல்ல திட்டமிட்டார்.

அதற்காக கடல்மார்க்கமாக அவரும் வேறு சில குடும்பத்தினரும் படகில் சென்று கொண்டிருந்தனர். அந்தப் படகு எதிர்பாராதவிதமாக துருக்கியின் கோஸ் தீவில் கவிழ்ந்தது. இதில் ரேஹன், காலிப், ஆய்லான் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.

உயிரற்ற சடலமாக ஆய்லானின் உடல் கோஸ் தீவின் போட்ரம் பகுதியில் கரை ஒதுங்கியது. கடற்கரையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போன்ற அந்த குழந்தையின் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி உலகம் முழுவதையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

உயிர் பிழைத்த அப்துல்லா குர்தி தனது குடும்பத்தினரின் உடல்களை பெற்றுக் கொள்ள துருக்கியின் முக்லா நகர மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கோஸ் தீவில் இருந்து 4 கி.மீ. தொலைவில் எங்கள் படகு வந்தபோது ராட்சத அலையால் படகு தூக்கி வீசப்பட்டது. நாங்கள் அணிந்திருந்த லைப் ஜாக்கெட் போலியானது. அதனால் அனைவரும் தண்ணீரில் மூழ்கினோம். படகின் ஒரு பகுதியை பிடித்தபடி நானும் எனது மனைவியும் குழந்தைகளை காப்பாற்ற போராடினோம். முதல் ஒரு மணி நேரத்தில் எனது மூத்த மகன் காலிப் உயிரிழந்தான்.

மூத்த மகன் காலிப், இளைய மகன் ஆய்லாவுடன் அப்துல்லா குர்தி| படம்: ராய்டர்ஸ்

இரண்டாவது மகன் ஆய்லனையாவது காப்பாற்றிவிடலாம் என்று அவனை தண்ணீருக்கு மேலே தூக்கிப் பிடித்திருந்தேன். ஆனால் அவனும் எனது கையிலேயே இறந்துவிட்டது. எனது மனைவியையாவது காப்பாற்றலாம் என்று நினைத்தேன். அவளும் என்னைவிட்டு போய்விட்டாள் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். இனிமேல் உலகத்தையே எனக்கு தந்தால்கூட எனக்கு எதுவுமே வேண்டாம். அவர்களோடு சேர்த்து என்னையும் புதைத்துவிடுங்கள். இல்லையேல் அவர்களின் கல்லறை அருகே அமர்ந்திருந்து உயிரை விட்டுவிடுவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிரியாவின் கொபேனி நகர் தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. குர்து இனத்தைச் சேர்ந்த அப்துல்லா அங்கு முடிதிருத்தும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிக்க அவர் சிரியாவின் ஒவ்வொரு பகுதியாக குடும்பத்துடன் தப்பி ஓடிக் கொண்டிருந்தார்.

அப்துல்லாவின் சகோதரி திமா குர்தி தற்போது கனடாவின் வான்கோவர் நகரில் வசித்து வருகிறார். அவரது ஏற்பாட்டின்பேரிலேயே அப்துல்லா கனடாவுக்கு செல்ல புறப்பட்டார். முதலில் துருக்கி சென்று அங்கிருந்து கனடாவுக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அபாயகரமான கடல் பயணத்தில் அவரது குடும்பம் பலியாகியுள்ளது.

அதிர்ச்சியில் கல்லாகிவிட்டேன் பெண் புகைப்பட நிபுணர் சோகம்

துருக்கியின் டோகன் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பெண் புகைப்பட நிபுணர் நிலுபர் டெமிர். இவர்தான் கரை ஒதுங்கிய சிறுவன் ஆய்லானின் உயிரற்ற உடலை புகைப்படம் எடுத்தவர். அவர் கூறியதாவது: கடந்த புதன்கிழமை அதிகாலை போட்ரம் கடற்கரையில் இரண்டு படகுகள் கவிழ்ந்த தகவல் அறிந்து அங்கு சென்றேன்.

புகைப்பட நிபுணர் நிலுபர் டெமிர்.

அங்கு கடற்கரையில் தலைகுப்புற கிடந்த குழந்தையின் உடலைப் பார்த்து அப்படியே கல்லாக உறைந்துவிட்டேன். அந்த குழந்தையின் துயரத்தை உலகறியச் செய்ய வேண்டும். அவனின் கடைசி அழுகுரலை உலகம் கேட்க வேண்டும் என்பதற்காக அந்த குழந்தையை புகைப்படம் எடுத்தேன். அங்கு நான் சிந்திய கண்ணீர் இன்று உலகமெல்லாம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in