Published : 23 Sep 2020 05:38 PM
Last Updated : 23 Sep 2020 05:38 PM

அலெக்ஸி நவால்னி சுதந்திரமாக இருப்பார்: ரஷ்யா

அலெக்ஸி நவால்னி தனது சொந்த நாட்டிற்கு வந்தால், அவர் பிற குடிமக்களைப் போல சுதந்திரமாக இருப்பார் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும்போது, “அலெக்ஸி ரஷ்யாவுக்குத் திரும்ப வந்தால், மற்ற ரஷ்யக் குடிமக்களைப் போல அவர் எந்த நேரத்திலும் சுதந்திரமாக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நவால்னி தானே விஷத்தை எடுத்துக் கொண்டிருக்கலாம் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமசித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.

ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்துள்ளது. இந்த நிலையில் அலெக்ஸி நவால்னியிடம் விசாரணை நடத்த ரஷ்யா முயன்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x