Published : 23 Sep 2020 01:38 PM
Last Updated : 23 Sep 2020 01:38 PM

ஐ. நா.வின் ஊழியர்களுக்குக் கரோனா தடுப்பூசிகளை அளிக்கத் தயார்: புதின்

உலகெங்கிலும் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தன்னார்வலர்களுக்குத் தங்களது கரோனா தடுப்பு மருந்தை வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பொது நிகழ்வு ஒன்றில் ரஷ்யா அதிபர் புதின் பேசும்போது, “நம்மில் எவரும் இந்த ஆபத்தான வைரஸை எதிர்கொள்ள முடியும். இந்த வைரஸ் ஐக்கிய நாடுகள் சபை, அதன் தலைமையகம் மற்றும் பிராந்திய நிறுவனங்களின் ஊழியர்களை விட்டு வைக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர்களுக்கு நாங்கள் கண்டறிந்த கரோனா தடுப்பு மருந்தைத் தரத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், ரஷ்ய அதிபர் புதினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து முதல் தடுப்பு மருந்தைத் தயாரித்தது. இதற்கு ஸ்புட்னிக்-5 எனப் பெயரிட்டு கடந்த மாதம் பதிவு செய்தது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதனைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தியது ரஷ்யா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x