Published : 22 Sep 2020 05:45 PM
Last Updated : 22 Sep 2020 05:45 PM

வீட்டிலிருந்தே பணியைத் தொடருங்கள்: போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்

பிரிட்டனில் கரோனா பரவல் தீவிரமாகி இருப்பதைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசினார்.

“இது எளிதாக இருக்கப் போவதில்லை என்பது நமக்கு நன்கு தெரியும். வைரஸ் பரவுவதை நாம் கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்களால் முயன்றால் வீட்டிலிருந்தே பணியைத் தொடருங்கள். பார்கள், உணவு விடுதிகள், பிற கடைகள் 10 மணிக்கு மூடப்படும்” என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கரோனா வைரஸைத் தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வி அடைந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது. இந்த நிலையில் பிரிட்டனில் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுவெளியில் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரிட்டனில் கரோனா பரவல் அக்டோபர் மாதத்தில் தீவிரமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x