Published : 22 Sep 2020 12:49 PM
Last Updated : 22 Sep 2020 12:49 PM

அமெரிக்காவில் 2 லட்சத்தை நெருங்கும் கரோனா பலி

அமெரிக்காவில் கரோனா பலி இரண்டு லட்சத்தை நெருங்குகிறது என்று ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹோப்கின்ஸ் கூறும்போது, “அமெரிக்காவில் கரோனா இறப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனாவுக்கு 1,99,818 பேர் பலியாகி உள்ளனர். 68 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவில் கரோனாவினால் ஏற்பட்ட இறப்புகளில் 70% பேர், 65 வயதைக் கடந்தவர்கள் என்று அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கரோனா பாதிப்பில் கலிபோர்னியா மாகாணம் முதலிடத்தில் உள்ளது. கலிபோர்னியாவில் கரோனா பாதிப்பு 8 லட்சத்தை நெருங்கவுள்ளது. பலி எண்ணிக்கையில் நியூயார்க் முதலிடத்தில் உள்ளது. நியூயார்க்கில் இதுவரை 33 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸால் தற்போது உலகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x